About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Wednesday, November 15, 2023

கரையொதுங்கிய பண்பலைகள் 

கடந்த வருட கடைசிப்பகுதியில் ஆரம்பித்த பதிவு. கடையப்பாவிற்கு பிறகு இரண்டு வருடங்களாக போகிறது. இன்னும் சில மாதங்களில் நான் + நீ , இன்ஆக்டீவிட்டி தொடர்பாய் மெயிலில் இருக்கவா? இல்லை அழிக்கவா? என்று கூகுள் கேட்பதற்கான அறிகுறிகள்  இப்போதே தென்படுகின்றன. இதற்குள் இருக்கின்ற இரண்டு மூன்று வாசக பெருந்தகைகள் அவ்வப்போது சந்திக்கும்போது கேட்டுக்கொள்வார்கள். 

"ஏதும் அப்டேட் இல்லையா ?." 

மன்னிக்க.எல்லா அப்டேட்களையும் நேரம் குத்தி கொன்று விடுகின்றது. ப்ரியோரிட்டிகளின் லிஸ்டில் பொழுதுபோக்குகள் எல்லாம் எங்கேயோ போய் ஒளிந்து கொள்கின்றன. வயது ஏற, பொறுப்பு வருகின்றதோ என்று பயமாக வேறு உள்ளது. பார்க்கலாம். 

அண்மையில் நெட்பிளிக்ஸில் "All the light we cannot see" என்று நான்கே எபிசோட்டுகளுடன் ஒரு லிமிட்டட் சீரிஸ் வெளியாகியிருந்தது.  புலிட்சர் விருது பெற்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஒரு சீரிஸ். நிறைய நாட்களின் பின் பிஞ் வோட்சில் பார்த்து  முடியும் போது, அந்தரத்தில் பல்டி அடித்தபடி இருந்த இந்த பதிவுக்கும் .... அடடே என்னும் படியாக ஒரு முடிவு கிடைத்தது. 

சீரிஸ் பார்க்காதவர்கள் பார்த்து விடுங்கள். மஸ்ட் வோட்ச் லிஸ்டில் இருக்க வேண்டியது. ஸ்பாய்லர் இல்லாமல் இரண்டு வரி  கேட்பவர்கள்  - 

"இரண்டாவது உலக யுத்தத்தில், நாஜிகளின் சட்டங்களிற்கு விரோதமாக Frequency 13.10 இல் ஒலிபரப்பாகிய ஒரு வானொலியும் அதனை இரகசியமாய் கேட்கின்றவர்களுமாய் நகர்கிறது." 

########## 

எங்களிடமும் ஒரு காலம் இருந்தது. மொபைல்களிற்கு கவரேஜ் கிடைக்காத காலம் போல வானொலிகளிற்கு அலைவரிசை சிக்காத காலம். அதன் போது வீடும், அங்கிருந்த PANASONIC பிராண்ட் Version 2000 வானொலியும் நிறைய அநியாயங்களை எதிர்கொண்டிருந்தன. 

Panasonic 2000 க்கு என்று வீட்டின் முன் பகுதியில் ஒரு நிரந்தர இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தது. காலையிலிருந்து இரவு வரை ஓயாது உழைக்கின்ற ஒரு ஜீவனுக்கு ஒரு நிரந்தர இடத்தை வழங்கியதில் என்ன பெரிய உள் நோக்கம் இருந்து விடப்போகிறது. இருந்தது. 

ரேடியோ அண்டெனாவில் இருந்து ஒரு செப்புக்கம்பி கட்டி அதை  கூரை உச்சியின் மேல் தொடுத்து விட்ட போது "உன் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும் " ஆறு மணி என்பதை சரியாக காட்டியது. கொஞ்சம் மீட்டர் கட்டையை சுழட்டினால் "தங்க சூரியனே கேட்டது". அலைவரிசையை செப்புக்கம்பி சரியாக உள்வாங்கி கொண்டது. அது மாட்டிய இடம் சரி என்பதாய் அண்ணர் தம்ஸ் அப் காட்ட, யன்னலில் கால் வைத்து, குனிந்து கொண்டிருந்த அண்ணரின் முதுகில் மற்றக்காலை சமநிலைப்படுத்தி நிலத்தில் லாண்ட் ஆக முடியும். (அண்ணரை உழக்குவதற்கு இதுதான் சரியான நேரம் என்பதை உணர்ந்து நேற்று காணாமல் போன கத்தரிக்காய் பொரியலை கவலையோடு மனதுக்குள் நினைத்தவாறே ) தொம் என்று தவறுதலாக காலை வைத்து, முதுகில் ஒரு உழக்கு உழக்கி விட்டு மறு காலை நிலத்தில் வைக்க, இடுப்பில் கையை வைத்தவாறு நிமிர்ந்து கொள்வதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. 

அப்போதெல்லாம் வீட்டில் ஏணி கிடையாது. அவசரத்திற்கு வீட்டிற்கு மேல் ஏறுவதென்றால் இரண்டு வழிகள்தான் இருந்தது. ஒன்று. நாலு வீடு தள்ளிப்போய் ஏணி கடன் கேட்க வேண்டும்.மேலே ஏறுவது எல்லாருக்கும் பிடிக்காது என்பதால்  அனேகமானோர் ஏணியை கடன் கொடுக்க மாட்டர்கள். சில வேளை கொடுத்து விட்டு ஏறி மேலே நிற்கும் போது, அவசரமாக ஏணி தேவை என்று கீழே இழுத்தி விழுத்தி விட்டு எடுத்து சென்று விடுவார்கள். அப்படி ஒரு தடவை அந்தரித்து நின்ற போது கண்டுபிடித்ததுதான் இந்த இரண்டாவது வழி. மனித ஏணி. எண்ணெய் பரல் மேல் அண்ணர் ஏறி குனிந்து நிற்க அவர் முதுகில் கால் வைத்து ஏறி,இறங்குவது.அந்த வழியை கண்டறிந்த பிறகு மற்ற வீடுகளில் ஏணி வாங்குவதையே தவிர்க்க தொடங்கியிருந்தோம். நாலு வருட மூப்பு கணக்கை காட்டி மனித ஏணியின் அடியில் எப்போதும் அண்ணர் நிற்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது. இருந்தாலும் .... அந்த ஏணியும் சில நேரங்களில் தள்ளாட்டம் காட்டிவிடும். மேலே ஏறிய பிறகு முதல் நாள் சம்பவங்களினை நினைவில் வைத்து ஏணி நகர்ந்து விட்டால் ஒரு மணித்தியால வெயிலுக்குள் ஓட்டு சூட்டில் நின்று மாசில் வீணையை அரைகுறையாய் ஒப்பிப்பதற்கு பதிலாய், கீழே குதித்து காலை முறித்து கொள்ளலாம். 

அடடா... ஏணிக்கு ஒரு தனி போஸ்டே போடலாம் போல இருப்பதால், அதை ஸ்கிப் பண்ணிவிடலாம். "சக்தி கொடுவோ அல்லது "தங்க சூரியனோ" முடிவதற்கு சரியாக ஏழு, எட்டு நிமிட கால அளவு பிடிக்கும். அது அன்றாட வாழ்வில் இரண்டறக்கலந்த ஒன்று. இப்போது 90s களின் நொஸ்டால்யா டைப் மீம்களின் வடிவில் சுற்றி திரிகிறது. 

சக்தி எஃப் எம்மும், சூரியன் எஃப் எம்மும்  ஸ்மார்ட் போன்களிற்கு முன்னரான ஒரு காலத்தில் முகப்புத்தகங்களிற்கு முன்னரான ஒரு காலத்தில், ஸ்பொட்டிபைகள், பொட்காஸ்டுகளிற்கு முன்னரான காலத்தில், ஒரு தசாப்த யுகங்களில் நிறைய கதைகளை பேசியிருந்தன. 

2000 ஆண்டிற்கு  பின்னர்  சூரியனும், சக்தியும் fm அலைவரிசைகளில் முடிசூடிக்கொண்ட காலப்பகுதிகள். "ஜனரஞ்சகம்" என்பதை சரியாக உச்சரித்து காட்டின. அது வரைகாலமும் இருந்த வானொலி நிகழ்ச்சிகள், அறிவிப்புக்கள் எல்லாவற்றையும் தூக்கி கடாசி விட்டு புதிதாக ஒரு  வரலாற்றை உருவாக்கயிருந்தன. சக்தி, சூரியனோடு தென்றல் fm  இருந்தது. அரச வானொலி. சீனியோரிட்டியில் மற்ற fm களுக்கு மூப்பு. சிறப்பு என்னவென்றால் அண்டெனா இல்லாவிட்டாலும் கூட கிறிஸ்டல் கிளியராக தென்றல் வீசும். ஆனால் ஐனரஞ்சகம் என்ற வார்த்தையே உச்சரிக்க வராது. அதனால் இதற்கு மேல் தென்றலுக்கு பந்தியில் இடமில்லை. 

இப்போதைய மின் வெட்டுக்களை கொடுப்புக்குள் வைக்ககூடிய  அளவில், போரின் பின்னரான 2000 - 2004 காலப்பகுதிகள் இருந்தது.  இருபத்தி நான்கு மணி நேரத்தில் இரண்டு மணி நேரமே ஊருக்குள் இரவு வேளைகளில் மின்சாரம்  பாய்ந்தது. மிகுதி நேரங்கள் அந்தர் விளக்கொளிகள் உடனான சம்பாசனைகளும், இந்த FM கள் எக்ஸ்ரா அட் ஒன்ஸ்களாகவும் இருந்தன. விளக்கு வெளிச்சத்தில் தொலைக்காட்சி தெரிந்தாலும், தொ.கா வை பார்த்து ரேடியோக்கள் பெருமையோடு இரண்டு அல்லது நான்கு எவரெடி பற்றறிகளுடன் பாடிக்கொண்டிருந்தன. 

பற்றரியின் வானொலியுடனான ஆயுட்காலம் என்பது மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு மூன்று வாரம்தான். மூன்றாவது வாரத்தின் இறுதி பகுதியில் மழைக்குள் நனைந்து தொண்டை கட்டியது போல கர கரக்க ஆரம்பிக்கும். ஹாரிஸ், யுவனின் பேஸ், பீட்டுகளை எல்லாம் சுவாசிக்க முடியாது சேடம் இழுக்கும். அநிருத் மட்டும் அப்போது இருந்திருந்தால் "ஹூக்கும்" என்பதுதான் panasonic 2000 ன் இறுதி வார்த்தையாக இருந்திருக்கும். 

பற்றறி சேடம் இழுக்கும் போது சக்தியோடு  தென்றல் வந்து சாம்பாராகி ஒரே நேரத்தில் இரண்டு RJ கள் கலந்து பேசுவார்கள். சூரியன் வழமைக்கு மாறாக நாலு ஸ்டேசன் தள்ளி போய் நின்று உதிக்கும் . இவையெல்லாம் எவரெடிகள் இறுதி மணிதுளிகளிற்கு தயாராகி விட்டன என்பதற்கான அறிகுறிகள். மாதத்திற்கு இரண்டு அல்லது  நான்கு பற்றறிகள் மட்டுமே, கோட்டா என்று கொண்டிசனுடன் வாழ்பவர்களிற்கு மூன்றாவது வாரப்பகுதி மிக குறூசியலான ஒன்றாக இருக்கும். 

இப்போதைய கரண்டு பில்களும் அப்போதைய பற்றரி பில்களும் LHS = RHS கள். இலகுவாக சமன்படுத்த கூடியவை.தட்டுப்பாடே இல்லாத ஒவ்வொரு யாழ்ப்பாணத்தானின் ஸ்டொக் குடோனுக்குள்ளும் அரிசி, சோப்பு, பருப்புக்களுடன் நிறைய, நிறைய பற்றரிகளும்  இருக்கும்.  மாதம் இவ்வளவுதான் என்று பற்றறி கோட்டா கட்டுப்பாட்டுடன் வாழ்பவர்கள், காலை, மதியம் இரவு நேர செய்தி கேட்பதற்கு மட்டுமே  வானொலியினை இயக்கி எங்கே அதிகம் சத்தம் வைத்தால் பற்றறி தேய்ந்து விடுமோ என்று காதுக்கு பக்கத்தில் தோளில் வைத்து ஒருவர் மட்டும் கேட்டு மற்றவர்களுக்கு செய்தியை பின்னர் பார்சல் செய்வார்கள். அவர்களை பற்றறி கஞ்சன்கள் என்று அழைப்பர். 

எங்கள் வீடு கொஞ்சம் பேராசைக்கார வீடு. ஒரு நாளில் தூங்கும் நேரம் தவிர மற்றைய நேரம் முழுவதும் ஏ.ஆர் அல்லது ராஜா இதமான சத்ததில் வேண்டும் என்கின்ற அளவுக்கு ஒரு பேராசை. அந்த பேராசைக்கு எல்லாம் "பற்றறி கோட்டா" கிழமைக்கு ஒன்று என தேவையாக இருந்தது. எங்களையொத்த பேராசைக்கார யாழ்வாசிகள் அதனை ஸ்கிப் பண்ணிய முறை மிக அலாதியானது. 

அந்த அடிமுறை வருமாறு - சித்திரவதையில் சாக போகிற நிலையில் விட்டு விடுவார்கள் என்றால் இங்கே பற்றரிகளிற்கான சாவு வேளை நெருங்கும் போது அவற்றிற்கான சித்தரவதை ஆரம்பித்திருக்கும். அது மரணத்திலும் கொடியதாக இருக்கும். முதலில் பற்றரியின் நடுவில் இருக்கும் காபன் எலக்ரோட் உடையாத அளவிற்கு  சுட்டியலால் சுற்றிவர  இரண்டு தட்டு தட்ட வேண்டும். (வலிமையான வாயுள்ள சிலர் பல்லையும் , சிலர் கதிரைக்காலின் அடிப்பகுதியையும் பயன்படுத்துவார்கள்)  பின்னர் அதனை ஒரு இரண்டு, மூன்று நாள் முப்பது டிகிரி வெயிலுக்குள்( தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பது) காயவிடுவதன் மூலம் அந்த பற்றரிகளிற்கு மேலும் ஒரு கிழமைக்கு உயிர் பிச்சை கொடுக்க முடியும். 

இப்படியான யுக்திகளுடன்,  Panasonic பிராண்ட் 2000 version இன் காலவோட்டத்தில் ஒவ்வொரு நட்டாக இழ(க்)க தொடங்கியிருந்தது. அவ்வளவு கடுமையாக ஒவ்வொரு நாட்களும் உழைத்தது காரணமாக இருக்கலாம், அல்லது, வேறு பல நிகழ்வுகளும் காரணமாகியிருக்கலாம். 

2003 ன் ஒரு மழைக்கால நாளில்..... அண்டெனாக்கம்பியை அண்ணரும் நானும் ஆளுக்கு பாதியாக பிரித்து எடுத்துக்கொண்டோம். ஏன் எதற்கு என்றெல்லாம் சரியாக ஞாபகமில்லை. அண்ணர் எரிந்த "மலை" என்றால் நான் "லாவா" என அடியில் நின்று, இருந்த காலப்பகுதிகள் அவை. அவருக்கு சூரியன் என்றால் எனக்கு சக்தி என்று இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டையும் ஒரு வானொலியில் கேட்க முடியாத ஒரு நிலையில் மீட்டர் கட்டையின் ரிபன் ஒரு தடவை அறுக்கப்பட்டது. கணேஷ் மெக்கானிக்கின் ரிப்பேர் கடைக்கு panasonic 2000 போய் வந்தது. அதன் பின்னரான ஒருங்கிணைப்பு பேச்சு வார்த்தைகளின் மூலம் இரண்டு அண்டனாக்களையும் இணைத்து கொழுவி ஒரு செடூலில் சக்தியும் சூரியனும் மாறி மாறி ஒலித்துக்கொண்டாலும், சில குருஷேத்திர நிலைகளில் அண்டனா கம்பிகள் இரண்டாகி, பின்னர் ஒன்றாகின. 

ஒரு நியூக்கிளியர் மிசைலை லோஞ் பண்ணுவதற்கு மிலிட்டரி டாப் காமண்டர்களிருவரின் திறப்புக்களும் ஒரே நேரத்தில் செருவப்படுவது போன்ற ஒரு உணர்வை panasonic 2000 காலை வேளைகளில் அனுபவித்துக்கொண்டிருந்தது. 

2004 அளவில் ரெக்கோடர் வேலை செய்யாமல் போனது. திருத்துவதற்கு முயற்சித்து முடியாது என்றானபோது,கசட்டில் சேகரிக்கப்பட்டு இருந்த, எப்போதாவது அரிதாக ஒலிபரப்பாகும் சில பாடல்களை  தலை முழுக வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த மிக்ஸ்ரேப்களில் ஒன்று கூட இப்போது ஆயிரமாயிரம் ஸ்பொட்டிஃபை பிளேலிஸ்டுகள் தரமாட்டாத ஒரு திருப்தியை தந்தன. அதற்கு காரணம் பாடல்களுடன் கிடைத்த அறிவிப்பு. ஒவ்வொரு பாடலுக்கு இடையிலும் நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் Talk time இருக்கும். பெரும்பாலும் அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்ற விதம், 

நேரம் 07.59.57 

வன்

டூ 

த்ரீ. 

வெளிச்சம் சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறும் போது கண்மணி என்கிற கண்மணியாளின் குரலினை ஒலிவாங்கி விழுங்கி கொண்டது. 

"நேயர்கள் அனைவருக்கும் கண்மணியின் இனிய காலை நேர வணக்கங்கள் ....மீண்டும் ஒரு திங்களின் காலை வேளைகளில் ....." 

கண்மணியாளுடன் காலை நேரத்தை ஆரம்பிக்கின்ற ஆயிரமாயிரம் பேர்களுக்கு கண்மணியாளின் முகம் தெரிந்திருக்க நியாயமில்லை. குரலிற்கு மட்டுமே அடையாளம் கிடைத்திருந்தது . நேரே பார்த்து, நீதான் இந்த உலகில் தி பெஸ்ட் ஆர்.ஜே என்று சொல்பவர்களுக்கு, நீ மற்ற வானொலிகள் ஏதும் கேட்பதில்லையா? என கேட்டு சமாளித்து கொள்கின்ற ஒரு சபையடக்கக்காரி. 

கண்மணியாளின் குரலில் வானொலி ஒலிபரப்பு என்பது பனித்துளி மழையாய் பெய்து அதற்குள் நனைவதை போன்றது. காலை 08 மணிக்கு அந்த குரல் வரவில்லை என்றால் என்னவோ, ஏதோ என்று பதைபதைக்கின்ற அளவுக்கு இருந்த எதிர்பார்ப்புத்தான் அந்த குரலுக்கான அடையாளம். 

முகப்புத்தமே இல்லாத அக்காலப்பகுதியில், அறிவிப்பாளர்களின் talk time என்பது  fb நியூஸ் பீட்களிற்கு ஒப்பானதாக இருந்ததது. இசையுடனான ஒரு சிறந்த நிகழ்ச்சி தொகுப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை  சூரியனும், சக்தியும் செவ்வனே செய்து காட்டின. சூரியனின் வானொலி நாடகங்களான "அரங்கம்" எல்லாம் டாப் நொட்ச் லிஸ்ட்களில் ஒன்று.ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஏதோ ஒரு விடயம் புதுமையாக கிடைத்தது. உலக விடயங்களில் ஒரு பகுதி வானொலி மூலமாகவே வீட்டினுள் வந்தது. 

2010 வரையிலும் Panasonic நின்று பாடியது. கடைசிக்காலங்களில் செப்புக்கம்பி தேவையில்லை என்னுமளவுக்கு frequency நன்றாக அப்டேட் ஆகியிருந்தது. 

ஸ்மாட் போன்களிற்கு பின்னர், ரியல் நியூஸ் பீட்கள் இரசனையை மாற்றத்தொடங்கின. பல fm களின் talk time மழுங்கடிக்கப்பட்டது. பாட்டு , ஒரு விளம்பர இடைவேளை, மறுபடியும் பாட்டு. அட இதற்கு ஸ்பொட்டிபைக்களே பரவாயில்லை என்னுமளவிற்கு முதல் நிகழ்ச்சியில் கேட்ட அதே பாட்டு அடுத்த நிகழ்ச்சியில். நிகழ்ச்சி தொகுப்புக்கள் எல்லாம் fb நேரலையில் வர, வானொலியை கேட்கவா இல்லை பார்க்கவா என்ற சந்தேகம் வரத்தொடங்கியது. ஒரு குரலுக்கு முகம் தெரியாத போது கொடுக்கப்பட்ட இரசனையை fb நேரலைகள் தின்றொழித்து கொண்டிருக்கின்றன. 

இன்றளவில் ஆரம்பத்தில் இருந்த இரசனையில் பெரிதாக மாற்றமில்லாமல் முக்கியமாக ஒவ்வொரு பாடல்களிற்கு இடையிலும் நல்ல ஒரு talk time உடன் சக்தி fm ஒலிபரப்பாகின்றது. ஏனைய fm கள் அப்டேட் என்ற பெயரில்... உதாரணத்திற்கு ஒரு அறிவிப்பு 

இந்த பாட்டு உங்களிற்கு பிடிந்திருந்தால்  எமது fb பேஜ்ஜில் லைக் பண்ணுங்க, கமண்ட் பண்ணுங்க... யூ டியூபில்... 

முகப்புத்தகம் போய் பாடலை லைக் பண்ணி கமண்ட் பண்ணுவதற்கு எதற்கு வானொலி கேட்க வேண்டும் என்று புரியவில்லை. ஜன ரஞ்சகத்தின் சரியான உச்சரிப்பு என்பது மீண்டும் எதிர்பார்ப்பாகி போனது. 

ஆனால் இந்த ஜனரஞ்சகங்கள் எல்லாவற்றிற்கு மத்தியில் 90களின் ஆரம்பத்தில் இருந்து எங்களிடம் ஒரு குரல் இருந்தது. அந்த குரலை சுதந்திரமாக இரசிப்பதற்கோ, கேட்பதற்கோ, பேசுவதற்கோ உரிமை இருக்கவில்லை. ஒரு 13.10 அலைவரிசை.

லிங்கத்தார் பங்கரின் கிழக்கு மூலைக்குள் கால்களை மடக்கியபடி தோளில் வானொலியை வைத்தது டியூன் செய்தார். 

நேரம் 07.59.57 

வன்

டூ 

த்ரீ. 

"நேயர்கள் அனைவருக்கும் கண்மணியின் இனிய காலை நேர வணக்கங்கள் ....மீண்டும் ஒரு திங்களின் காலை வேளையில், அலைவரிசை 13.10 ஊடாக உங்களோடு பேசிக்கொள்வதில் மகிழ்ச்சி. அலைவரிசையினை நேரலையாக வழங்குவதில் நிறைய இடர்கள். களத்திலிருந்து செய்தி வழங்குபவர்களை தொடர்பு கொள்வதில் சிரமங்கள் என கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது...." 

லிங்கத்தாரின் காதினுள் கண்மணியின் குரல் கேட்டதும் ஒரு புன்னகை ததும்பியது. "அக்கா என்னவாம்" என்று இளையவள் காதும் லிங்கத்தாரின் தோள் பக்கத்தில் வந்தது.

இங்கே தோளில் வைத்து வானொலி கேட்பதற்கு காரணம் பற்றறி தேய்ந்து விடும் என்பது அல்ல. அந்த குரலுக்கான அடையாளம் அது.  

கண்மணியின் குரல் தொடர்ந்து ஊடுருவியது. லிங்கத்தாருக்கு குரல் சொல்லும் விடயமல்ல செய்தி. தொடர்ந்து கேட்கும் குரல்தான் செய்தி. 

She is safe until now.

A message within a message. 

குரல் தொடர்ந்தது....  

"என் அப்பா அடிக்கடி சொல்வார். பேச முடியாதவர்கள் மட்டுமல்ல, பேச முயற்சிக்காதவர்களும் ஊமைகள்தானாம். கண்மணி ஊமையல்ல. தொடர்ந்தும் உங்களுடன் பேசிக்கொள்வேன். ஒரு செய்தியாளர் களத்திலிருந்து நேரடியாக.... அவரை இணைத்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்...." 

"பூம்ம்..." 

சில நிமிடங்கள் 13.10 ஊடாக எந்த சத்தமும் வரவில்லை. லிங்கத்தார் தோளிலிருந்த வானொலியினை எடுத்து நிறுத்தி விட்டு அமைதியாக சாய்ந்து கொண்டார்.    

"The most important light, is the light you cannot see." 


#########




#அற்பபிறவி


Friday, January 14, 2022

கடையப்பா - The man who opens the gates

ஊருக்குள் ஒரு நகர் பகுதி இருக்கிறது. ஏனைய நகர்ப்பகுதிகளை போலத்தான். அதிகாலை நான்கு, நான்கரைக்கெல்லாம் மெதுவாக துயில் எழுந்து கொள்ளும். வீதியிலிருக்கும் மஞ்சள் சோடியம் வெளிச்சங்களை கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துக்கொள்ளும்.இரவு முழுவதுமாய் வராத அந்தப்பயணி கடைசி நான்கரை டிரெயினில் வந்து இறங்குவான், ஏற்றிக்கொள்ளலாம் என்று அரைத்தூக்கத்தில் இருக்கும் ஆட்டோ டிரைவர்கள், சொத்தையில் கடிக்கும் நுளம்பை ஒரு கையால் அடித்தவாறே முன் சீட்டில் புரண்டு கொள்வார்கள். இருபத்து நான்கு மணி நேரமும் திறந்திருக்கும் சில தேநீர்க்கடைகளில் மட்டும் அந்நேரங்களில் கொதிநீராவி போவதற்கு வேறு வழியில்லாமல் வழிய, வழிய கடை வாசலுக்குள்ளாலேயே வெளியே வர எத்தனித்துக்கொண்டிருக்கும்.

வெயில்காலமோ, மழைக்காலமோ எல்லா நகர்ப்புறங்களினதும் அதிகாலைப்பொழுதுகளில் எப்போதும் ஒரு விநோதமான இளங்குளிர் உரோமங்களை விதிர்த்தபடி இருக்கும். அந்த இளங்குளிரை தவிர்த்துக்கொள்வதற்காகவே ஒரு கூட்டம்  அத்தேநீர்கடைகளுக்குள் அடைந்துகொள்ளும். டீ மாஸ்டர்கள் நெற்றியில் வழியும் வியர்வையை சுண்டுவிரலால் துடைப்பதற்கு நேரமில்லாத  பொழுதுகள் அவை. அந்த கூட்டத்தின் ஒரு சாரார் தொலைதூர பயணத்தை எதிர்நோக்கியவர்கள். வயிறு அதிகம் கடிக்காமலும் நிறையப்பசிக்காமலும் இருக்க அளவாய் ஒரு பணிஸின் நடுப்பகுதியை கடித்துக்கொள்வார்கள்.பஸ் வந்து விட்டாலும் என்ற பதை பதைப்போடு ப்ளேன்டீயோ அல்லது டீயோ  கையில் வைத்தவாறு கடைவாசலுக்கு முன்னால் ஆவி பறக்க காத்திருப்பார்கள். 

எந்த அவசரமும் இல்லாதவர்கள் நாவில் இளஞ்சூடான ரொட்டிகளும், சாயாக்களும் இரண்டறக்கலந்து கொள்ளும்.

ஓரிரு பேப்பர் கடைகளின் முன் வாசலில்  ஓடர் பேப்பர் கட்டுக்கள் போடப்பட்டிருக்கும். அதை அண்டிய பகுதிகளில் சிலர் கைகளில், கட்டுக்களிலிருந்து உருவப்பட்ட நாளிதழ்கள் பீடித்துண்டின் வெளிச்சத்தோடு வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கும். அதிகாலை வேளைகளில் யாரும் அரசியல் பேசுவது கிடையாது. ஏன் இப்படி, எதற்கு அப்படி என்ற ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. அந்த நாளுக்கான செய்திகள் பேப்பரின் எடிட்டருக்கு பிறகு முதலில் வாசிக்கப்படுவது அந்த இடத்தில்தான். அப்பகுதியில் ஒரு நிச்சலனம் சூழ்ந்து இருக்கும். வாசித்து முடிந்ததும் பழையபடி அந்த பேப்பர்கள் மடிப்பு குலையாது கட்டுக்குள் செருகப்படும். ஓடருக்காக காத்திருக்க தொடங்கும்.

ஆங்காங்கே கடைகளின் வாசல் கதவுகளோடு இரண்டாக, மூன்றாக நாய்கள் சுருண்டு படுத்திருக்கும். இரவு முழுவதும் நகரை காவல் காத்த களைப்பாய் இருக்கலாம். அதன் பக்கத்தில் போய் சுரண்டினாலும் கூட "ஏன் நாயே" என்று எவையும் நிமிர்ந்து பார்க்காது, மேலும்  சுருட்டிக்கொள்ளும் நேரமது.

ஒரு நகரம் முற்றாக விழித்துக்கொள்வது என்பது அந்நகர சந்தையின் கதவுகள் கிறீச்சிடும் போதாக இருக்கும். எந்த நகரத்தினதும் center of the maze சந்தையாகத்தானிருக்கும்.

இந்த நகரத்திற்கும் ஒரு சந்தை இருக்கிறது, அதற்கென்று  மிகப்பெரிய இரும்புக்கதவுகள் இருக்கிறது. தினந்தோறும் நகரின் தெற்கே இருக்கும் பள்ளிவாசல் மணி ஐந்து அடித்ததும், அதை திறந்து வைப்பதற்காக கடையப்பா எங்கிருந்தோ நேரம் தவறாது வருவார்.

கடையப்பா சந்தைக்காவலாளியாக இருப்பார் என்று உடனடியாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள். சந்தைக்கு ராக்கண்ணன் என்ற பெயரில் ஒரு காவலாளி இருக்கிறான்.

சந்தைக்கதவுகளிற்கு அண்மித்ததாய் ஒரு கால் நெளிந்த இரும்புக்கதிரை. முதுகுக்கு இதமாய் வைத்த பழுப்பேறிய தலகாணி சகிதமாய் யாரும் ராக்கண்ணனை சந்தித்துக்கொள்ளலாம். ராக்கண்ணன் பக்கத்தில் கூட ஒரு நாய் சுருண்டு படுத்திருக்கும். அதற்கு முழிப்பான் என்று ராக்கண்ணன் பெயர் வைத்திருந்தான். கடையப்பாவை கண்டதும் ராக்கண்ணன் அரைத்தூக்கத்தோடு தலையை மெதுவாக ஆட்டி கொள்வான். இருந்தபடியே இடுப்பில் கொழுவியிருக்கும் சாவியை எடுத்து கடையப்பாவிடம் கொடுப்பான். மறுபடியும் அரைக்கண்களை மூடிக்கொள்வான். சந்தையின் கதவுகள் கிறீச்சிடுவது ராக்கண்ணன் காதுக்கு சரியாக இரண்டு நிமிடத்தினுள் கேட்கும்.

கால காலமாக கடையப்பாவை தவிர வேறு யாரும் அந்த சந்தையின் கதவுகளை திறப்பது கிடையாது. துரதிஷ்டம், அப்படி திறந்த நாளின் ஒரு இரவில், சந்தைக்குள் மின் ஒழுக்கு ஏற்பட்டது. சாதாரண ஒழுக்காய் இருந்தால் சட்டி வைத்திருக்கலாம், என்ன செய்ய. சந்தை பகுதியளவில் பற்றிக்கொண்டது. பயர் பிரிகேட் டிங்கடித்து வரும்போது சாம்பல் காற்றில் கலந்து கொண்டிருந்தது. அதில் ஓரிரு துகள்கள், காய்ச்சலோடு போர்வையை தலைக்கு மொட்டாக்கு போட்டுக்கொண்டு, பராக்கு பார்க்க வந்து நின்ற கடையப்பாவின் கண்களிலும் விழுந்தது.

கடையப்பாவிற்கு ஒரு இன்ரோ.

நிஜப்பெயர் தெரியாது. வயது அறுபத்தைந்துக்கு மேலாகிறது. சரியான வயது அவருக்கு மட்டுமே தெரியும். முழங்கால் வரை மடித்துக்கட்டப்பட்ட சறம், முழங்கை தாண்டி கொஞ்சம் நீண்ட கை வைத்த தடிப்பான ஸ்வெட்டர். அதனுள் ஒரு கசியோ வோட்ச். காதுக்குள் குளிர் ஊடுருவாது சுத்திக்கட்டப்பட்ட துவாய். பத்தாம் நம்பர் பாட்டா சிலிப்பர். இரண்டில் ஏதோ ஒன்றின் அடிப்பக்கத்தில் ஊசி குத்தி இருப்பதால், சீமேந்து தரையில் நடக்கும் போது சர்க் சர்க் என்று ஒரு சத்தம் வந்து கொண்டிருக்கும்  . எப்போதுமே மூன்று நாள் மழிக்காத தாடி. இரண்டு பக்கமும் கொஞ்சமாய் கொடுப்புக்குள் குழி விழத்தொடங்கியிருந்த கன்னம். அதிகம் கதைப்பது கிடையாது. ஏன் "அதிகம்".  வேண்டாம். கதைப்பதே கிடையாது என்பது போதும்.

இத்தனை காலத்தில்  வேறு யாரும் சந்தைக்கதவுகளை திறந்தது கிடையாது என்றால்..

உடனே, ஏன்?

என்று கேட்காதீர்கள் அது அப்படித்தான் என்பார்கள் சிலர். வேறு சிலர் அது அவர் பரம்பரைக்கு உரிமையான சந்தை, அவர்தான் தினம் திறக்க வேண்டும் என்பது விதி என்பார்கள். ஒரு சிலர் அவர் திறக்காவிட்டால் ஏதும் கெட்டது நடந்துவிடும் என்பார்கள். இன்னும் சிலர் அவர் திறந்து வைப்பதால்தான் அந்த சந்தையில் எல்லா வியாபாரிகளுக்கும் நல்ல வியாபாரம், நல்ல லாபம் கிடைக்கிறது என்பார்கள். வெல்!கடைசி இரண்டு காரணத்தினையும் அனேகர் அதிகம் ஏற்றுக்கொண்டார்கள்.

கடையப்பா சந்தையைத்திறந்து விட்டு அதன் ஈசானமூலையில் இருக்கும் கட்டில்லாத கிணற்றில் போய் முகத்தை ஒரு அலசு அலசிக்கொள்வார். அப்படியே பேப்பர்கடையடிக்கு ஒரு நடை போவார். கடையப்பாவைக்கண்டதும் பீடிக்கள் காலடியில் நசுக்கப்படும்.

கடையப்பாவிற்கு பிடிக்காத விடயங்கள் சில இருந்தன

01.ஓசியில் பேப்பர் படிப்பவர்கள். 02.பீடியுடன் பேப்பர் படிப்பவர்கள்.

பீடி இல்லாத பேப்பர் ருசியில்லாது போகவே கட்டுக்குள் செருகிவிட்டு அனைவரும் நழுவிக்கொள்வர்கள்.

பேப்பர்கட்டுக்கள்  எல்லாம் வந்துவிட்டதா என்று ஒரு நோட்டம் விட்டுக்கொள்வார். அப்படியே நேரே வழமையாய் போகும் யோகுவின் தேநீர்கடைக்கு ஒரு நடை. அங்கே ஒரு ப்ளேன்டியையும் மூன்று ரொட்டியும் ஓடர் செய்து கொள்வார். வாங்கிக்கொண்டு சந்தை வாசலுக்கு போய் வழமையாய் இருக்கும் மாடிப்படியில் இருந்து கொண்டு ரொட்டியை கடிக்கும் போது, நகரம் கல கலக்க தொடங்கியிருக்கும். அந்த வினோதக்குளிர் அமைதியோடு சேர்ந்து காணாமல் போயிருக்கும்.

மெதுவாக சந்தையை சூழ இருக்கும் கடை முதலாளிகள் நெற்றியில் பட்டையடித்தபடி ஆறரைவாக்கில் வரத்தொடங்குவார்கள். தங்களது கடைக்கு முன்னாலே நின்ற படியே "கடையப்போ" என்று அவர் இருக்கும் திசையை பிடித்துக்கத்துவார்கள்.யார் அவசரப்பட்டாலும் இரண்டு ரொட்டியை விழுங்காமல் கடையப்பா எழுந்திருக்க மாட்டார். எழும்போது மீதமிருக்கும் ஒரு ரொட்டியை  ராக்கண்ணன் பக்கத்தில் இருக்கும் முழிப்பானுக்கு போடவே அதுவும் அதற்காகவே காத்திருந்தது போல முழித்துக்கொள்ளும். முழிப்பான் ஒருநாளில் முழித்து இருக்கின்ற சொற்ப நிமிடங்களினுள் அந்த ரொட்டியை கடிக்கின்ற கணங்களும் அடங்கும்.

கடையப்பா நூல்பிடித்தாற்போல் முதலாவதாய் கூப்பிட்டவரின் கடைக்கு போய் கடையை திறப்பார். பக்கத்தில் அடுத்த கடை, அதற்கு அடுத்த கடை என திறந்துகொண்டே செல்வார். கடையப்பாவினால் கடை திறக்கப்பட வேண்டும் எனக்காத்திருப்பவர்களே அந்நகர்ப்பகுதியில் அதிகம். கடை திறந்ததும் அவர் ஸ்வெட்டர் பொக்கட்டினுள் இருபதோ, ஐம்பதோ சுருட்டி வைப்பார்கள். கடையப்பா அதனை கண்டு கொள்வதில்லை. ஆனால் கடையப்பா கடையை திறக்க வேண்டுமாயின் எழுதப்படாத விதிகள் இருந்தன. கடைவாசல் தண்ணி தெளித்து சுத்தமாக இருக்க வேண்டும். திறப்பை வாங்கிக்கொண்டு சுற்றி ஒரு நோட்டம் விடுவார். கதவுப்பூட்டை வாஞ்சையோடு தடவிப்பார்ப்பார். திறப்பை அதனுள் செருகி திறந்துவிட்டு கடை முதலாளியை பார்த்து ஒரு தலையசைப்பு அவ்வளவுதான்.

சிலர் கடைகளை கடையப்பா திறப்பது கிடையாது. அந்த கடைகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கடையப்பாவின் காரணம் இருக்கும். சாராயக்கடைக்கு பக்கத்துக்கடைகளைக்கூட திறக்க செல்வதில்லை. அதனால் அந்த கடைகளை விட்டு வேறு இடம் மாறி சென்றவர்கள் தொகை எண்ணிலடங்கா. ஆனாலும் அதற்கெல்லாம் மையமான சாராயக்கடை மட்டும் எந்த நட்டமும் இல்லாமல் தொடர்ந்தும் இயங்கிகொண்டிருந்தது. சாராயக்கடை - விதிவிலக்கின் உதாரணமாக நகருக்குள் திகழ்ந்தது. இருந்தாலும் சாராயக்கடைக்கு கடையப்பா மீது ஒரு கறள் இருக்கவே செய்தது. கடையப்பா கடை திறக்காமலேயே இவ்வளவு லாபம் வருகிறதே, திறந்து வைத்தால் என்ற கேள்விக்குறி கனவில் அடிக்கடி வந்து சுருண்டு கொண்டது.

"நகருக்குள் கடையப்பா திறக்காத கடைகள் எவையுமிருப்பின், அவை காலவோட்டத்தில் பொலிவிழந்து, நலிவடைந்து போய்விடும்" என்ற நம்பிக்கையை பட்டயத்தில் எழுதாமல்  காதுவழியாக மட்டும் கடத்தி வைத்திருந்தார்கள்.

புதிதாக யாரும் கடைதிறக்கிறார்கள் என்றால் அவர்கள் கடை முன் முதல் நாளன்று கொஞ்ச நேரம் கடையப்பா ஊசாடுவார். அடுத்தநாள் காலையில் அந்த கடையை திறக்க வந்தால் உண்டு. இல்லை என்றால் எவ்வளவு காலத்தினுள் அந்தக்கடையை இழுத்து பொட்டலம் கட்டுவார்கள் என்று ஆட்டோ டிரைவர்கள் இரவு நேரத்தில் பந்தயம் பிடிப்பார்கள். ஆரம்ப அறிகுறியாய் சொற்ப நாட்களினுள் கடையின் பெயர் பலகை காணாமல் போய்விடும். அதனால் அந்த நகரத்தினுள் யாரவது புதிதாய் கடை திறக்கிறார்கள் என்றால் எல்லாரும் கடையப்பாவின் கடை நிலை என்ன என்பதனை உன்னிப்பாய் கவனிப்பார்கள்.

சிலநாட்களின் முன் ஒருதடவை இராசபூபதியின் உரக்கடைக்கு முன்னால் சிவப்பையும் செம்மஞ்சளையும் கலந்த நிறத்தில் வெற்றிலை துப்பியிருந்தது.  பூபதிக்கு உடம்பு முழுவதும் கொழுப்பிருந்தது. அதில் கொஞ்சம் திமிரால் வந்தது, அதிகம் பன்றி இறைச்சியால் வந்தது. பன்றிக்கொழுப்பில் ஊறிப்போயிருந்த பூபதியின் உடம்பு, வந்த அவசரத்தில் கடையை கூட்டும் பஞ்சியுடன்  கடையப்பாவிடம் திறப்பை கொடுத்து விட்டது. சுற்றி சுழன்ற கடையப்பா எதுவும்  சொல்லாமல் திறப்பை வெற்றிலை துப்பிய பக்கமாய் எறிந்து விட்டு நடக்க தொடங்கினார். பூபதிக்கு சுருக்கென்று ஏறிவிட்டது. கடையப்பாவை அந்த இடத்தில் வைத்து சங்கோஜ வார்த்தைகளால் கடைந்து எடுத்து விட்டான். கடையப்பா அதை கண்டுகொள்ளவில்லை ஆனால் அன்றிலிருந்து அந்த கடைப்பக்கம் செல்வதை கைவிட்டார். அன்றிரவு, இராசபூபதியை நினைத்து அந்த நகரத்து ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் பரிதாபப்பட்டுக்கொண்டனர்.

கடையப்பாவினை பகைத்துக்கொண்டவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் நட்டப்பட்டுக்கொண்டார்கள். அதற்கு காரணமாய் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு காக்கா Vs பனம்பழ தியரியை கைகாட்டினார்கள். கடையப்பாவிற்கு எதிராக அவர் திறக்காத கடைகள் எல்லாம் இணைந்து ஒரு சங்கமாக வலுப்பெற்றுக்கொண்டு வந்தது. சாராயக்கடை, அதற்கு தலைமை வகித்தது. அதில் இறுதியாக இராசபூபதி இணைந்து கொண்டான். அதன் பின்னர் மாலை வேளைகளில் தண்ணீர் கலக்காமல் என்ன செய்வதென்று பேசினார்கள். தொட்டு நாவில் வைக்க கூடியதாய்  சதித்திட்டம் போட்டார்கள்.

அடுத்ததாய் நடந்த வர்த்தக சங்க கூட்டத்தில் பூபதி தலைமையில் இருபதுக்கு மேற்பட்டோர் கடையப்பாவிற்கு எதிராய் ஒரு கண்டன போராட்டம் நடத்தினார்கள். போராட்டங்கள் தொண்றொன்பது சதவீத நிகழ்தகவுகளில் வெற்றியடைவதில்லை. ஈற்றில் அவையாகவே சமரசமடைந்து கொள்ளும். எனவே பூபதியை பார்த்து யாரும் அலட்டிக்கொள்ளவில்லை.

"கடையப்பா இறந்த பின்னர்  என்ன செய்ய போகிறாய் கடைகளின் சமுதாயமே? யார் உன் கடையை திறக்கபோகிறார்கள்?"

என்று பலகையில் கொட்டை எழுத்துக்களில் கறுப்பு பெயின்டால் எழுதி கையில் பிடித்துக்கொண்டு நின்றார்கள். ஆர்ப்பாட்டத்தின் முதல் நாள் மாலையில் சாராயக்கடை இலவசமாய் இயங்கியிருந்தது. பூபதி "டிரிங்ஸ் ஒன் மீ" என்று அரை குறை ஆங்கிலத்தில் அலறியிருக்க, அதற்கு தெளியாத நன்றிக்கடனாய் கண்டன ஆர்பாட்டடம் கனதியாய் இருந்தது. 

வர்த்தக சங்கம் கூடிப்பேசியது. சமரசத்திற்கு பூபதியை அழைத்தது. பூபதி அசரவில்லை. போரட்டம் தொடர்ந்தது. கடையப்பா இல்லாவிட்டால் என்ன செய்வது. அதன் பின்னரான கடைகள், சந்தையின் நிலைமை என்பவற்றை நினைத்து பார்க்கவே வர்த்தக சங்கத்திற்கும் கூட கொஞ்சம் வெல வெலப்பாயிருந்திருக்கலாம். இந்த நிலைமை தொடரக்கூடாது என்று முடிவெடுத்தார்கள். இருக்கும் போதே இல்லாத ஒன்றிற்காக இயைபாக்கமடைந்து கொள்ள திட்டமிட்டுக்கொண்டார்கள்.

Sometimes destiny plays in the name of change.

சந்தையை திறக்கும் பொறுப்பு இனி ராக்கண்ணன் உடையது. கடையப்பாவைக்கொண்டு தனி நபர்கள் யாரும் தமது கடையை திறக்கக்கூடாது. திறந்தால் சங்கத்தில் அவர்கள் அங்கம் பறி போகும் என தீர்மானித்துக்கொண்டார்கள்.

உள்ளூர கடை வர்த்தகர்களுக்கு நடுக்கம் எடுத்தது. சிலர் தமது எதிர்ப்பை பகிரங்கமாக காட்டினாலும், பூபதியின் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை. அடங்கி போனர்கள். பூபதி எகத்தாள சிரிப்போடு சாராயக்கடையின் தோளில் கை போட்டபடி கூட்டம் முடிய வெளியேறினான்.

இன்னுமொரு நாளின் அதிகாலை பொழுது. நகரம் மறுபடியும் மறக்காமல் 

விழிக்க தொடங்கியிருந்தது. வழமைக்கு மாறாக ராக்கண்ணன் குறுக்கும் மறுக்குமாய் திரிந்தான். பள்ளி வாசல் மணி டிங்கியது. ஐந்து ஒன்று, இரண்டு, மூன்று முப்பதாகியும் கடையப்பா வரவில்லை. சந்தை வியாபாரிகள் கதவு திறக்க காத்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் ராக்கண்ணனுக்கு புரிந்து விட்டது,  கடையப்பா இனி வரமாட்டார். சந்தை கதவுகள் ஒரு வித நடுக்கத்துடன் கிறீச்சிட்டுக்கொண்டன. முழிப்பான் கூட முழித்திருந்தது. அன்றைய தினத்தில் சிலர் தாமாகவே கடையை திறந்து கொள்ள, சிலர் கடையை திறக்காமலேயே திரும்பியிருந்தார்கள். நகரத்தை சூனியம் பிடித்துக்கொண்டது போல இருந்தது. மாலையில் சாராயக்கடையில் வாடிக்கையான கூட்டம் கூடியது. அவர்களுக்கு "டிரிங்ஸ் ஒன் தி கவுஸ்" சலுகை வழங்கப்பட்டது.

இரவின் மையப்பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அமைதி சூழ்ந்திருந்தது.

தொடர்ந்து வந்த நாட்களில் மீண்டும் நகரம் கடையப்பாவை மறந்து வழமை போல இயங்க தொடங்கியது. பீடிகள் பட்டு சில பேப்பர்கள் கருகியிருந்ததை தவிர, எதுவுமே வழமைக்கு மாறாமல், நாட்கள் வாரங்களாகிய போது முற்றாகவே கடையப்பாவை மறந்து விட தொடங்கியிருந்தது. நகரம்.

இரண்டு வாரங்கள் தாண்டியிருக்கும். பயந்தது போலவே, காகம் மீண்டும் பனையில் வந்து இருந்து கொண்டது. இந்ததடவை பனம் பழத்திற்கு கொரோனா என்று பெயர் வைத்து  நகருக்குள் உருட்டி விட்டது. பனம்பழம் எங்கும் லொக் டவுன் போட்டது. சந்தையை தூக்கி சமூக இடைவெளி என்ற பெயரில் வீதியோரங்களில் காய விட்டது.

கடைகளை அரைக்கதவுகளில் திறக்க வைத்தது. தொட்ட இடமெல்லாம் கடைகளில் நட்டம் சத்தம் போட்டது.

அந்த நகரச்தில் மட்டும் எல்லாருக்கும் திடீரென்று அப்படியாயிருக்குமோ என்ற சந்தேகம் துளிர் விட்ட போது, இராக்கண்ணனும் முழிப்பானும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். மீண்டும் கடையப்பா ஞாபகத்தில் வரத்தொடங்கினார். கடையப்பாவை தேட தொடங்கினார்கள். அவர் மீண்டும் வந்து திறந்து வைத்தால் இதெல்லாம் சரியாகிவிடும் என்று நம்பினார்கள். சந்தையின் சுவர்களின் பல இடங்களில் "கடையப்போ, வீ வோன்ட் யூ பேக்" என்று, யாரோ இரவோடு இரவாக கரித்துண்டால் எழுதி வைத்தார்கள்.

கடையப்பாவிற்கு தகவல் எப்படியும் போகும். நிச்சயமாக திரும்பி வருவார் என்று நகரம் நம்பியது.

நம்பிக்கை வீண் போகவில்லை. எழுதி வைத்த மூன்றாவது நாளில் கடையப்பா திரும்ப வந்திருந்தார். யாரும் இல்லா விட்டாலும் சந்தையை திறந்து வைத்தார். அரைக்கதவுகளை நகர்த்தி விட்டார்.

சொற்ப நாட்களினுள் பனம்பழம் போதுமென்ற அளவுக்கு நகருக்குள் உருண்டு விட்டு வேறு இடங்களுக்கு நகர தொடங்கியதும் நகரம் வழமைக்கு வந்தது. எல்லாம் கடையப்பா வந்த நேரம் என்று ஆட்டோ டிரைவர்கள் பேசிக்கொண்டார்கள்.

சாராயக்கடை மற்றும் பூபதியின் கடைகளை தவிர, கடையப்பாவினால் வழமை போல மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. பூபதியின் பொறுமையாறு உடைப்பெடுத்த ஒரு நாளில்,

"எண்ணி மூன்று நாட்களுக்குள் கடையப்பா வந்து தன் கடையை திறந்து வைக்க வேண்டும். இல்லா விட்டால் யார் கடையையும் மீண்டும் திறக்க முடியாமல் பண்ணுவேன்"

என்று பகிரங்கமாக சவால் விட்டான். ஆட்டோ டிரைவர்கள் ஒரு வித மிரட்சியுடன் சிரித்து கொண்டார்கள். நகரம் மீண்டும் கலக்கம் அடைந்தது.

சவாலின் முதலாவது நாளின் முடிவில், பூபதி எரிச்சலின் உச்சத்தில் கடைக்கு ஓடர் போட்டு விட்டு, கடையப்பாவிற்கெதிராக என்ன செய்யலாம் என்று குழப்பத்தினை சாராயக்கடை மேசையில் பரப்பி வைத்திருந்தான்.

இரண்டாவது நாள் முடிவில் முதல் நாள் போட்ட ஓடருக்கு காத்திருந்து விட்டு, வராத லொறி காரனை 'து'வில் ஆரம்பித்து திட்டியவாறு கடையை இழுத்து சாத்தி விட்டு நடக்க தொடங்கியிருந்தான்.

அப்போது பூபதிக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. 

நாளை கடையப்பா வரப்போவதில்லை. அப்படியே மனம் மாறி வந்தாலுமே கூட, கடை திறக்கப்பட போவதில்லை என்று.

மீண்டும் ஒரு நாளின் அதிகாலை பொழுதில், நகரம் துயில் எழ ஆரம்பித்த கணங்களில், பீடித்துண்டுக்களின் பிரகாசத்தில் பிரபல நாளிதழின் தலைப்பு செய்தி தெளிவாக தெரிந்தது.

"உர இறக்குமதிக்கு தடை ."


            ##########




Wednesday, May 19, 2021

Mr.மியாவ்

வேலை எட்டரைக்கு என்றிருக்கும் போது எட்டு இருபதிற்கு போட வேண்டிய சேட்டின் மீது அயன் பாக்ஸை வைத்து விஷ்க், விஷ்க் என இழுத்து, இரண்டாய், நான்காய். ஆறாய் கையை மடித்து அட்ஜஸ்ட் பண்ணி கால்வின் கிளெயினை காற்றில் கரைத்து அல்சர் வராத அளவிற்கு வயிற்றை நிரப்பி,திறப்பை தேடி, பைக்கை தள்ளி,ஏறி,உட்கார்ந்து புறப்படலாம் என்னும் போது.... வளர்த்த நன்றிக்கடனை வயிற்றில்  கட்டிக்கொண்டு  பூனை  குறுக்காலே ஓடியதும். பகீரென்றிருந்தது.

பூனைகளைப்பற்றி ஆராய்ச்சியாளர் ஒருவர் ஆராய்ந்து எழுதி, முடியாமல் தொங்கி கொண்டிருக்கும் பதிவிலிருந்து ஒரு சில
வரிகளை இந்த பதிவின் சில பகுதிகளில்  காணமுடியும்.

//😼....ஒரு வகை முக்காலமும் உணர்ந்த ஞானிகளாகவே பூனைகள் ஆதிகாலத்திலிருந்து இருந்து வருகின்றன. தங்களிற்கு உணவு போடும் அடிமைகளுக்கு எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சினைகள் வரும் எனின்  அதை முற்கூட்டியே அறிந்து எச்சரிப்பதற்காகவே இவ்வாறு குறுக்காலே பாய்ந்தோடுவதாக ஆராய்ச்சி முடிவுகள் அடிக்கோடிட்டு காட்டுகின்றன.மேலும் பூனைகள், மனிதர்களை அடிமைகளாகவே பார்ப்பதாக தொண்ணூற்றைந்து சதவீத ஆய்வுகள் சொல்கின்றன, அதற்கான காரணம் ......😼 //

"சனியன் குறுக்கால போகுது,தண்ணி கொண்டு வல்லாம், குடிச்சுட்டு கொஞ்ச நேரம் கழிச்சு போ"

இல்லை இப்போதே போகிறேன் என்று வைத்தால் ....என்ன நடந்தாலும் அது சனியின் தலையில்தான் விழும். எதற்கு வீண் வம்பு என்று செக்கன்களை எண்ண வேண்டியிருந்தது.

அந்த சனியன், அண்ணரின்  ஏ/எல்  பைனல் எக்சாம் நாட்களில் ஒரு புலம்பெயர் குட்டி அகதியாக  வீட்டிற்குள்  வந்து சேர்ந்த ஒன்று. எங்கே?  அதை துரத்தினால் நாளை நடக்க இருக்கும் செகண்ட் பார்ட் பிசிக்ஸ் பேப்பர்  கவிட்டு விடுமோ என்ற பயத்தில் கையில் வைத்திருந்த றோசா சேரின் பாஸ் பேப்பர் புத்தகத்தால் அதை பாசமாய் தடவி விட சனி மெதுவாய் சவுண்ட் விட்டது.
மியாவ்....

அடுத்தடுத்த நாட்களில் அந்த சனிக்கு பெயர் வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.சனி  வீட்டின் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்து இருந்தது. அடுக்கி வைத்த நெல் மூட்டைகள், அலுமாரியின் அடிப்பக்கங்கள், கட்டில் கரையோரங்கள், முக்கியமாய் சமையல் கட்டின் மூலை விளிம்புகளை வளைத்துக்கொண்டது. சனி மியாவ் என்று சத்தமிட்டதால் அதனை மியாவ் என்றே சில நாட்கள் கூப்பிடலாம் என்று இருக்க வீட்டில் இதுவரை இருந்து இறந்து போன மொத்த மியாவ்கள் 3 உடன் சேர்த்து அதற்கு ஒரு பெயர் சூட்டும் வரைக்கும் மியாவ் - 04 என்று அழைப்பதென முடிவானது.

மியாவ் - 04 முன்பு இருந்த மற்ற 03 மியாவ்கள் போலில்லாமல் தனித்துவமாய் விளங்கியது. வெள்ளையும் சாம்பலுமாய் கலந்த கலரில் வெளிர் பச்சை துரு துரு கண்களுடன் வீட்டினுள் உலா வந்தது.

அது சரி முதல் இருந்த 03 மியாவ்களுக்கும் என்ன நடந்தது என்ற சந்தேகம் வரலாம். 

// 😾....பூனைகள் விசித்திரமானவை. வளர்ப்பவர்களை காட்டிலும் வளரும் வீட்டிலேயே அதிக பற்றினை கொண்டிருக்கும். அவற்றிற்கு அந்திமக்காலம் நெருங்குவதை முற்கூட்டியே அறிந்து கொள்கின்ற சக்தி உள்ளதாக அறியப்படுகின்றது. அவ்வாறு முதலே அறிந்து கொண்டவுடன் அவை வீட்டினை விட்டு வெளியேறிவிடும். அது அவற்றின் கைன்ட் ஒஃவ் மக்கா யாத்திரை போல. எங்கே அப்படி போகின்றன என்று யாரும் இதுவரையிலும் கண்டு பிடித்தது கிடையாது. திரும்ப வரவில்லை எனின் அவற்றின் பயணம் முடிந்தது என்ற முடிவுக்கு வரலாம்...😾//

முதலாவது மியாவ் திரும்பி வரவில்லை. ஒரு வயது கூட தாண்டியிருக்காது. அதற்கிடையில் அதன் வாழ்க்கையில் யாத்திரைக்கு என்ன அவசியம் வந்து விட்டிருக்க போகிறது. புரியவில்லை.

03 வதின் விசனில் ஏதோ பிழை நேர்ந்திருக்கிறது. ஒரு நாள் காலை அடித்து பெய்த மழையில் கிணற்றுக்குள் 360 பாகையில் மிதந்தவாறே சுற்றி சுற்றி வந்தது. 

சரி இரண்டாவது எங்கே என்றால் அதுவும் திரும்பி வரவில்லை என்ற எடுகோள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது  டெக்ஸ்ரர் 08 சீசன்களையும் பிஞ் வோட்ச் லிஸ்டில் வைத்து பார்த்துக்கொண்டிருந்த சமயம். அண்ணரின்  சந்தேக கண்களை அவதானிக்க முடிந்தது. ஏன் எனக்கே என் மீது ஒரு சந்தேகம் வந்தது.

போகட்டும மியாவ் 4 ற்கு வரலாம்.
மியாவ் - 04 ஐ அடுத்தடுத்த நாட்களில் விழுந்து புரண்டு ஆராய்ச்சி செய்ததில் அது மிஸ்டர் மியாவ் என்பது புலப்பட்டது.

// 😸...கடுவன் பூனைகள் வீட்டில தங்காது. உது பார் கொஞ்ச நாளில வீட்ட விட்டே ஓடிடும்....😸 //

அம்மாவின் அனுபவ  முடிவுகளில் ஒன்று, மிஸ்டர் மியாவ் என ஊர்ஜிதம் செய்த போது வெளியிடப்பட்டது.

அம்மா Vs மியாவ்வுகள்.

மியாவுகளுக்கும் அம்மாவுக்கும் இடையில் காலங்காலமாக பல காத தூர இடைவெளிகளே பேணப்பட்டு வந்தது. எப்போதும் அவற்றின் செயல்கள் அம்மாவிற்கு வெறுப்பூட்டுபவையாகவே இருந்து வந்துள்ளன.

ஆரம்ப காலத்தில் எந்தவொரு மியாவையும் வளர்ப்பதற்கான அனுமதி வீட்டில் வழங்கப்படவில்லை. அது காலவோட்டத்தில்  அனுமதிக்க பட்டதிற்கு பின்னால் ஒரு வரலாறு இருந்தது. ஒரு தடவை சூட்கேசிற்குள் இருந்த அம்மாவின் ரெட் கலர் டிகிரி சேர்டிபிக்கட் குழலுக்குள் சேர்டிபிக்கட்டானது பசில்ஸ் துண்டுகள் போல குமைந்து கிடந்தது. எடுத்து ஒழுங்கு படுத்தி ஒட்டிய போது அம்மாவின் பெயரின் கடைசி எழுத்தை எங்கு தேடியும் காணவில்லை. அந்த ஆத்திரத்தில் எதிரிக்கு எதிரி நண்பனே என்ற சமாதானத்துடன் மியாவுகளுக்கான அனுமதி வீட்டில்  வழங்கப்பட்டிருந்தது.

இருந்தாலும் அனுமதியையடுத்து வந்த 03 மியாவுகளிற்கும் அம்மாவிற்கும் ஒத்து வரவில்லை. அம்மாவின் சமையல் பாத்திரங்களையும் தலையணைகளையும் கட்டிலையும் அவை ஒரு வித குரோதத்துடனே அணுகியிருந்தன. டஜன் கணக்கில் அவற்றில் தம் முடிகளை கொட்டி திட்டுகளை சம்பாதித்துக் கொண்டன.

அம்மாவின் பாத உரசல்களை தவிர்த்துக்கொண்டன. மறந்தும் உரசும் சந்தர்ப்பங்களில் ஐந்தடி தள்ளி போய் பல்டி அடித்தன. இரவானால்  வீட்டிற்கு வெளியே தள்ளப்பட்டன. மியாவ் -02 இந்த சித்திரவதைகளை தாங்காமல்தான் ஓடி விட்டது என்று அம்மாவின் மீது  குற்றம் சாட்டிக்கொண்டோம்.  

மியாவ் -04 அப்படியான வேலைகளை தவிர்த்தோ என்னவோ அம்மாவை இம்பரஸ் பண்ணியது. சாப்பிடுகின்ற சந்தர்ப்பங்களில் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்ளும். மியாவ் என்று ஒரு சத்தம். கவனிக்கவில்லையா.... இரண்டு காலில் தவ்வி முன்னங்கால்களால் ஒரு சின்ன உரஞ்சல். அவ்வளவுதான். மியாவ் தொடர்ந்து வந்த நாட்களில் பழகி கொண்டது, அதுவும் எப்படி இந்த வீட்டில் அம்மாவுடன் சேர்வைவ் பண்ணுவது என்பதை கச்சிதமாக பிடித்துக்கொண்டது.

அதிகாலை வேளைகளில் எழுந்து சமைக்கும் அம்மாவுக்கு அடுப்பங்கரை ஓரங்களில் கம்பனி கொடுக்க தொடங்கியது. பனிக்கால பொழுதுகளில் அடுப்புக்கள் எப்போது மூட்டப்படும் என்று காவல் இருக்க தொடங்கியது. மூட்டப்படும் அடுப்புகளிற்கும் அம்மாவுக்கும் இடையில் இருந்தவாறே குளிர்காய்ந்து கொண்டது. எந்தவொரு மியாவுக்கும் கிடைக்காத வரத்தை எப்படி மியாவ் -04 பெற்றுக்கொண்டது என்பது பெரிய ஒரு மித் ஆக இருந்தது.

பெயர் சூட்டும் படலம்

கிட்டத்தட்ட மியாவ் வீட்டிற்குள் வந்து இரண்டு வருடங்களாக மியாவ் என்ற பெயருடனே சுற்றி திரிந்து . நாங்கள் மட்டும்தான் அதை மியாவ் என்றோமே தவிர அதற்கு ரெஸ்போன்ஸாக அது திருப்பி மியாவவில்லை.

ஊமையாக இருக்குமோ என்ற சந்தேகம் அடிக்கடி துளை விட்டது. சாப்பாட்டு நேரத்திற்கு மட்டும் கத்தி தொலைப்பதனால்,  அந்த சந்தேகமும் தவிடு பொடியானது.இந்த வார்த்தையை பயன்படுத்தும் போது தவிடு ஏற்கனவே பொடிநிலைதானே என்றொரு சந்தேகமும் அடிக்கடி வருவதுண்டு.

எந்த பெயரை வைத்து அழைத்தாலும் திரும்பி பின்பக்கத்தை காட்டியபடி செல்லும் மியாவ் -04 ஐப் பார்க்கவே எரிச்சலாக இருந்தது. வைபரில் ப்ரெடி தி பொக்ஸ் என்றொரு ஸ்டிக்கர் செட் அறிமுகமாகியிருந்த நேரம் அது.  அந்த ஸ்டிக்கரில் இருந்த ப்ரெடியை பார்த்துவிட்டு ப்ரெடி என்ற போது மியாவ் திரும்பி பார்த்து...

"மியாவ்"

என்றதும் ஆச்சரியமாக இருந்தது.

எதற்கும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்று விட்டு மீண்டுமொரு தடவை  ப்ரெடி என்ற போது

"மியாவ்"

யெஸ்.

// ...😼 பூனைகளிற்கு நீங்கள் நினைத்த மாத்திரத்தில் பெயர் வைத்து விட்டு செல்ல முடியாது. எல்லா பெயர்களிற்கும் அவை ஆம் சொல்வது கிடையாது. "பூஸ்" என்ற பொது பெயரை மட்டுமே இது வரைக்கும் அதிகளவான பூனைகள் ஏற்றுக்கொண்டதாகவும் அறிய முடிகிறது. சில பூனைகள் அதற்கு கூட பதிலளிப்பதில்லை. வாலை மட்டுமே ஆட்டிக்காட்டுகின்றன எனவும் அதற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும்...😼//

ப்ரெடி ... ப்ரெடி...ப்ரெடி என்று மூன்று தரம் காதுக்கு பக்கத்தில் சொன்ன போது கன்னத்தை உரசி விட்டு சென்றது.

சோ தட்ஸ் இட். மிஸ்டர் மியாவ், மிஸ்டர் ப்ரெடியாக ரெஜிஸ்டரான ஆண்டு 2012 ன் ஏதோ ஒரு நாளில்.

நாளடைவில் வாழ்க்கையின் வழமையான ரூட்டின்களோடு மிஸ்டர் ப்ரெடியும் ஒன்றாகியது. காலை வேளைகளில் குடிக்கும் பாலின் ஒரு பங்கு சொந்த கப்பிலிருந்து போக தொடங்கியது. அண்ணர் வீட்டில் நிற்கும் நாட்களில் பால்பங்கு அவருக்கும் இருந்தது.

மாலை வேளைகளில் மிக்சர், பிஸ்கட் என்பன இருவர் தரப்பிலிருந்தும் அடாவடி வரியாக அறவிடப்பட்டதுடன் புட்டுக்கு மாக்குழைக்கும் சந்தர்ப்பங்களிலும், மற்றும் தேங்காய் திருவும் நேரங்களிலும் அம்மாவுக்கு பக்கத்தில் அமைதியாய் அமர்ந்து கொண்டும் தன் தேவைகளை நசூக்காக நிறைவேற்றிக்கொண்டது.

சோறு வைத்தால் திருப்பியும் பார்க்காதது, மீனை சோற்றோடு குழைத்து வைத்தால் மோர்ந்து பிடித்து, தேர்ந்தெடுந்து மீன் துண்டுகளை மட்டும்  கவ்வியது.

அம்மாவின் சேர்டிபிக்கட்டுக்கு காரணமாயிருந்த அத்தனை பேரும் தினந்தோறும் என்கவுண்டர் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அறை மூலைகளில் எஞ்சிய வால்களாக வீசி எறியப்பட்டிருந்தது.

சந்தோசத்தில் அம்மாவின் புட்டுமாப்பங்கு அதிகமாகவே மிஸ்டர் ப்ரெடி கொழுக்க தொடங்கியிருந்தார்.

ஒரு கட்டத்தில்  வீட்டிற்கு வெளியிலும் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியிருந்ததுடன் பாலங்கட்டப்போய் கொண்டிருந்த அணில்களிற்கும் பேராபத்து வர தொடங்கியது.

மிஸ்டர் ப்ரெடி அணில்களிற்காக காத்திருந்த போது எங்கே இப்படியே போனால் சீதையை மீட்க முடியாதோ என்ற குழப்பத்தில் அவர் காத்திருப்பதை குழப்புவதே ஒரு வேலையாக இருந்தது. அந்த நேரத்தில்.

தினந்தோறும் சோம்பல் முறிப்புகள் புகைப்படங்களாக மாற்றப்பட்டு பெருமளவு மெகாபைட் மெமரிகளை அடைத்துக்கொண்டது.



காலம் கட்டாயம் உருண்டோடத்தான் வேணுமா? எக்ஸ்பிரஸிலும் போகும்.  2017  ஆம் ஆண்டளவில் ஒரு நாள் ப்ரெடியை காணவில்லை. ......
யாத்திரைக்கு போய் விட்டதோ என்ற எண்ணம் வந்தது. அம்மா கடுவன் பூனை ஆராய்ச்சி முடிவை மீண்டும் மேற்கோள்காட்டினார்.

ஒரு நாள் ....வரவில்லை,
இரண்டு நாள்....வரவில்லை,
மூன்று நாள்...வரவில்லை,

எனி வராது என்ற முடிவுக்கு வந்தாயிற்று.

அவ்வளவுதானா என்றிருந்தது. வாழ்க்கையில் ஏழு வருடங்கள் வீட்டின் எல்லா இடங்களிலும் கூடவே இருந்திருக்கிறது என்பது சாதாரணமில்லை.ஒவ்வொரு நாளின் உணவுண்ணும் வேளைகளும், நித்திரையால் எழும்பும் தருணங்களும் அதனோடுதான் நிழ்ந்திருக்கிறது. இருந்தாலும் இது போதாது இன்னும் இருந்திருக்கலாமோ என்று மனது குறுகுறுத்துக்கொண்டது. ஒரு வெற்றிடம் வந்து நிரவிக்கொண்டது.

தினம், தினம் தொடர்கின்ற சில காரியங்கள் அந்த நேரங்களில் அற்பமாக தெரிந்தாலும், அது தவிர்க்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் மனதுக்குள் ஒரு தவிப்பு இருந்தால் அங்கேயே உணர்ந்து கொள்ளுங்கள், அதனை எவ்வளவு தூரம் நேசித்துள்ளீர்கள் என்று.

நாலாம் நாள் முடிவில் காலையில் பால் குடித்துக்கொண்டிருந்த போது காலை உரசியது போல இருந்தது. மூன்று நாட்களும் இப்படியான பிரமை தொடர்ந்து கொண்டே இருந்தது.எங்கெல்லாம் சுருண்டு படுத்துக்கொள்ளுமோ அந்த இடங்களில் எல்லாம் இருப்பது போன்று தோன்ற தொடங்கியிருந்தது. மறுபடியும் உரசியது. பிரமையில்லை நிஜம் என்றது மனது.

இருக்கும் கதிரைகளிற்கு கீழேயே அடிக்கடி தேடிப்பாருங்கள். நீங்கள் தொலைத்த அதிசயங்கள் நிறைய அங்கேதான் அதிகமாய் கொட்டிக்கிடக்கின்றன.

கொஞ்சமாய் மெலிந்து போயிருந்தது. கண்களில் அதே துறு துறுப்பு இருந்ததாலும் ஏதோ ஒரு மூலையில் சோர்வு தெரிந்தது. மூன்று நாட்கள் சாப்பிடவில்லையாய் இருக்கலாம் அல்லது வயது போகின்றது என்ற எண்ணம் வர தொடங்கியிருக்கலாம். எங்கே யாத்திரை போனது தெரியவில்லை. அங்கிருந்து திரும்பி வந்தது அதை விட ஆச்சரியமாயிருந்தது.

//...😾 உலகிலுள்ள எல்லாப்பூனைகளும் ஒரே மாதிரியானவை கிடையாது. இது இப்படித்தான் என்ற வகைக்குள் அவற்றை அடக்க முடியாது. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனித்துவக்குணங்களே காணப்படுகிறது. இருந்தாலும் கடுமையான ஆராய்ச்சிகளின் மூலமாக சில முடிவுகளிற்கு வரக்கூடியதாகவிருந்தது. அது தொடர்பாக எழுதி வைத்திருந்த தாளில் எப்படியோ தெரியவில்லை, டீகப் சரிந்து ஊற்றியுள்ளதுடன் எழுதியது யாவும் அழிந்த நிலையில் உள்ளது. இரண்டு மூன்று நாட்களாக இங்கே ஒரு பூனை அலைந்து திரிகிறது. அதிலிருந்து இந்த ஆராய்ச்சியை தொடர ....😾//

வாரணே அவசியமுண்டு என்ற மலையாளப்படத்தில் சொன்னது நினைவுக்கு வந்தது.

"எப்போதும் திரும்பி வருவதற்கு ஒரு வீடு இருக்க வேண்டும் அப்போதுதான்
போகின்ற பயணங்கள்  அழகாக  இருக்கும்" 

மிஸ்டர் ப்ரெடிக்கும் யாத்திரையின் நடுவழியில் அது புரிந்திருக்கலாம். அதனால் கூட திரும்பியிருக்கலாம்.

2018 மற்றும் 2019 களையும் ப்ரெடி சில ஊசிகளுடனும் பல மருந்துகளுடனும் கடந்தது. வேட்டைக்காக காத்திருக்கும் கால அளவு சுருகியது. அதிக நேரங்களை நெல் மூட்டைகளின் மேலேயே செலவழித்தது.

அடுப்பளவு உயரத்திற்கு தாவி பாய்வதற்கான சக்தியை கால்கள் இழந்திருந்தது. அதிகாலை வேளைகளில் அடுப்புக்கள் விருப்பமின்றியே நெருப்பிக் கொண்டன.

எல்லாவற்றிலும் விநோதமாய் மதிய நேரங்களில் வெறும் சோறு சாப்பிட்டது.

2020 . ப்ரெடியின் பத்தாவது வயதில் பெருமளவு சாம்பல் கலர் முடிகள் பிரவுன் கலருக்கு மாறியிருந்தன. கண்களில் சில நேரங்களில் ஏனோ தெரியவில்லை கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. இன்பெக்சன்னாய் இருக்கலாம் என்று, கண்களில் விடுவதற்கு பெட் கேரில் ஐ டொரப் தந்தார்கள்.பிஸ்கட், மிக்சர்களை போன்ற கரடு, முரடு பொருட்களை தொலைவில் இருந்தே தவிர்த்துக்கொண்டது. பற்களையும் இழந்திருக்கலாம்.

நிறைய நாட்கள் எதுவுமே உண்ணாமல் நோன்பாகவும், சில நாட்களில் மட்டும் சாப்பிடுவதுமாக கழித்துக்கொண்டது. 

இருந்தாலும் தவறாமல் எப்போதும் காலை நேரங்களில்  தன் பால்பங்கிற்காக காத்திருந்தது மட்டும் ஒரு ஆறுதலாக இருந்தது.

அதனால்தான் என்னவோ அதன் பால்பங்கு மட்டும் இன்று வரையிலும் தினமும் கப்பின் அடிப்பாகங்களில் தேங்கி நிற்கின்றது.

ஆனால் 2020 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தின் இறுதி வார நாட்களில்,
ஒரு நாளில்...

ப்ரெடி இறந்து போயிருந்தது.


########






#அற்பபிறவி

Tuesday, November 17, 2020

"S" MEANS HOPE

கந்தசஷ்டி ஆரம்பித்திருந்தது. அண்ணர் அதை அனுஷ்டிக்க தொடங்கியிருந்தார். அடுத்த ஆறு நாட்களும், வீடு விரதகோலம் காணும். அண்ணர் அவிழாமல் வேஸ்டி கட்டி, அமைதியாய் கோயிலுக்குள் நின்று சாமி கும்பிடுவதற்கும், இடையில் எச்சில் கூட விழுங்காமல் விரதம் இருப்பதற்கும் எங்கேயோ பழகிக்கொண்டார். 

அதை குழப்ப வந்த ரம்பனாகவோ அல்லது ஊர்வசனாகவோ அவ்வப்போது  மரவள்ளிகிழங்கு பொரியல் பாக்கட்டையோ அல்லது மிக்சர் பாக்கட்டையோ உடைத்து கடக், மொடக் என்று சத்தம் கேட்கக்கூடியதாக 
மூன்றடி தள்ளியிருந்து சாப்பிட்டுக்
கொள்வேன். 

"விரதம் இருப்பவர்கள் பார்த்துக்கொண்டிருக்க சாப்பிடக்கூடாது, அது மகா பாவம்" என அந்நேரத்தில் முணு முணுத்துக்கொண்டால்..."

"சொல்லுங்க விஸ்வாமித்திரரே உங்க விரத பலனை எல்லாம் சாபம் கொடுத்து அநியாயம் ஆக்க போறிங்களா? என்று கேட்டால் கம்மென்று அடங்கி விடுவார்"

விரதத்தை கலைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த எனக்கு, சுட்டுப்போட்டாலும் விரதம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எந்த சந்தர்ப்பத்திலும் வரவில்லை. அதற்கு என்ன காரணம் என்று யோசித்து பார்த்ததன் விளைவுதான் இந்த பதிவு.

சமய பாடம் என்பது சாதாரண தரங்களில் முதுகை சுற்றி மூக்கை தொடுவதான ஒரு பாடம். நான்கு முக்கிய நாயன்மார்களையும் அவர்களின் டிராவலிங் கிஸ்டரியும், டிராவலிங்கின் போது அவர்கள் பொழுது போக்கிற்காக ஒவ்வொரு இடங்களில் பாடிய பாடல்களையும் கொஞ்சமாக மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டாலே போதுமானது. நூற்றுக்கு ஐம்பது புள்ளிகளை ஜாம் என்று எடுத்து விடலாம். மிகுதி ஐம்பதிற்கும் அலைய வேண்டும். காரைக்கால் அம்மையாரை பிரக்டிஸ் பண்ணிக்கொள்ள வேண்டும். தலையால் நடப்பது என்ன சாதாரண விடயமல்ல. 

தலங்களும் தல விருட்சங்களும் அந்த காலங்களில் சமய பரீட்சைகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றதாக அமைந்தது. சைவ பரிபாலன சபை, மார்கழி மாத விடாத மழைக்குள்ளும் அடாது எக்சாம் வைத்து அதற்கு மூன்று மாதம் கழித்து A கிரேட்டா , F கிரேட்டா என்று போட்டு சேர்டிபிக்கேட் அனுப்பி வைக்கும். அதில் C கிரேட்டில் சித்தி எடுத்தாலே அருகில் இருப்பவன் சுரண்டி கேட்பான்.

 "எப்டிடா"

அதை சிம்பிளாக ஒரு வார்த்தையில் கிருபை என்று சொல்லி முடித்து விட முடியாது. உண்மையிலேயே அது டலண்டால் கிடைத்தது.

சைவ பரிபாலான சபை பெரிதும் டார்கெட் பண்ணிக்கேள்விகளை கேட்பது ஆறுமுக நாவலரை மையமாக வைத்துக்கொண்டு அவரது இயற்பெயர், பிறந்த இடம் பண்ணிய தொண்டுகள் என்று வரிசையில் வந்து கடைசியாய் கட்டாயம் ஆ.மு.நாவலர் விரதம் என்றால் என்ன என்று கூறியுள்ளார் என்ற கேள்வியை திணிக்காமல் ஒரு எக்சாம் பேப்பரை முடிக்க மாட்டார்கள். பிட் எல்லாம் அடிக்காமல் ஆன்சர் பண்ணுகின்ற  ஒரே கேள்வி அதுதான்.

" மனம் பொறி வழிப்போகாதற் பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் ப்ளா, ப்ளா, ப்ளா... என்று ஒரு மூன்று வரிக்கு முழக்கி எழுதி விட்டால் போதும் ஐந்து மார்க்ஸை  சுளையாக போடுவார்கள். 

சோ, ஆரம்பத்தில் நாயன்மார்களை வைத்து திரட்டிய 50 இங்கே ஒரு 5, பிளஸ் பண்ணினால்  மொத்தமாய் 55 . சிம்பிளாய் ஒரு சித்தி வித் C கிரேட்.

கிரிப்டோனில் "S" MEANS HOPE  என்பது போல,எங்களூரில், சின்ன வயதில் சமய பாடம் என்பது ஒரு "S"  ஐ போன்று காட்சியளித்தது. நாயன்மார்களை எல்லாம் சூப்பர் ஹீரோக்களாக ஏற்றுக்கொண்ட காலம் அது. 
தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும் என்பதில் தொடங்கி, செய்யவிட்டால் கற்கண்டு போட்டு ஞானப்பால் கூட கிடைக்கலாம் என்பது வரைக்கும் அது நம்பிக்கையூட்டியிருக்கிறது. எட்டு வயதில் படிக்கும் போது,  முதலை வாய்க்குள் போய் விட்டால் தப்பி விடலாம் என்பதும், மலையை ஒற்றை விரலால் தூக்கலாம் என்பதும் பிஞ்சு மனதிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்துக்கொண்ட அதிசயங்கள். அந்த அதிசயங்களை அப்பட்டமாக ஏற்றுக்கொண்டதற்கு காரணம் நம்பிக்கை. 

ஒன்றைப்பின்பற்றுவதும், பின்பற்றாமல் விடுவதும் அவர் அவர்களின் தனிப்பட்ட மன நிலையை பொறுத்தது. ஆனால் அது இப்படித்தான் இருந்தது, இருக்கின்றது என்பதை காலங்களினூடாக கடத்துவதற்கு ஒரு ஊடகம் தேவை. அந்த வேலையை சிறு பராயங்களில் பார்த்துக்கொண்டது இந்த சமய பாடம்தான். சுருங்க சொன்னால் நம்பிக்கை என்ற ஒற்றை சொல்லைத்தான் பாடத்தின் எல்லா அத்தியாயங்களும் ஒவ்வொரு விதமாய் சொல்லிச்சென்றிருக்கிறது. 

அதை எல்லாம் புரியாமலேயே படித்து முடித்து வாழ்க்கையின் பல பள்ளங்களில் விழுந்து, பல பள்ளங்களை தோண்டிய பின்,

ஒருவன் கடவுள் இருக்கிறது என்பான். ஒருவன் இல்லை என்பான். இன்னுமொருவன் இருந்தால் நன்றாய் இருக்கும் என்பான். அந்தக்குழுக்களையெல்லாம் விட்டு விடுங்கள். எட்டவாக இன்னுமொருத்தன் நின்று அடடா இப்படி சொல்வதும் நன்றாகத்தான் இருக்கிறது, அப்படி சொல்வதும் நன்றாகத்தான் இருக்கிறது என்று எல்லாவற்றையும் இரசித்துக்கொண்டே  கொடியை தூக்கி பிடிக்கின்ற அவனை யாராவது பார்த்திருக்கிறீர்களா?. 

நிச்சயமாய் பார்த்திருப்பீர்கள். உங்கள் பக்கத்திலேயே இருந்திருக்க கூடும். சிறு வயதில் விரதம் என்று இருக்கும் போது, கையில் டொபி கிடைத்தால், யாரும் பார்க்கவில்லை என்ற தைரியத்தில், எடுத்து மெதுவாக வாய்க்குள் போட்டுக்கொண்டு எதிரே காலண்டரில் இருக்கும் முருகனையோ, பிள்ளையாரையோ பார்த்து திரு திரு வென்று முழித்து விட்டு, மன்னிச்சுக்கோ... கடவுளே, அடுத்த தடவை இப்படி டொபி கிடைச்சா, சாப்பிடவே மாட்டேன் என ஓர்மமாய் மனதுக்குள் கங்கணம் கட்டிக்கொள்கின்ற....வகையறாக்கள்  தான் அவர்கள்.

அவர்களுக்கு மீண்டும் மீண்டும் டொபி கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அவர்களும் சாப்பிட்டு கொண்டுதான் இருக்கிறார்கள. ஆனாலும் சாமி அவர்களை ஒண்ணும் செய்யல பார்த்தீர்களா !. 

சின்ன வயசு. சாமி மன்னித்து விட்டிருக்கலாம் அல்லது வயது போக அந்த பக்குவம் வரும். இந்த குழுவிற்குள்  இருக்காமல் வேறு ஏதாவது குழுவிற்குள் நிரந்தரமாய் மாறிப்போய் விடுவார்கள், அப்போது கவனித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் சாமியே அவர்களை விட்டு வைத்திருக்கலாம். 

நாவலரை விட்டு விடுங்கள். ஒற்றை வார்த்தையில் கேட்டால் விரதங்களும் அந்த "S"  யே அடையாளம் காட்டும். இங்கே எல்லா வழிகளும் "S" ஐ நோக்கியே டைவேர்ட் பண்ணப்பட்டால் ? "S" தான் கடவுளா? மூன்று வரியில் எல்லாம் எழுதாமல் சிம்பிளாக "S" என்று எழுதி விட்டு வரலாம். திருத்துபவர் புரிந்து கொண்டால் 10 மாக்ஸ் கூட கிடைக்கும் இல்லா விட்டால் ஸீரோ.

எல்லாருமே ஆரம்பத்தில் சொன்ன "S" மேல்தான் நிற்கின்றார்கள். அது பல சந்தர்ப்பங்களில் வளைந்த பகுதிகளினூடாக சறுக்கி வீழ்த்துவதற்கு முயற்சிக்கின்றது. சறுக்கினாலும் சிலர் மீண்டும் மேலே ஏறி "S" ன் மேலேயே ஆணி அடித்து விட்டு உட்கார்ந்து கொள்கின்றார்கள். சிலர் எங்கேயோ ஏதோ ஒரு புள்ளியில் சறுக்கினால், விழுந்து உடைந்து போனால், தாங்கள் நின்ற "S" யும் உடைத்து விட்டு வேறு எழுத்துக்களிற்கு தாவிக்கொள்கின்றார்கள். 

முடிவு.எல்லா விரதங்களுமே பிடித்திருக்கின்றது. ஆனாலும் அவற்றை பிடிப்பதற்குதான் மனம் இன்னும் பக்குவப்படவில்லை. அல்லது அதற்கான தேவை வரவில்லை என தோன்றுகின்றது. காரணம் விழுந்த பள்ளங்கள் போதாததாய் இருக்கலாம். இன்னும் அந்த மெர்ச்சியூரிட்டி லெவலை தாண்டாமல் இருக்கலாம். அது  வரைக்கும் "S" ன் மேலேயே இருந்து கொள்கின்றேன். டொபி கிடைத்தால் உடைத்து வாய்க்குள் போட்டுக்கொள்கின்றேன். சாமி மன்னித்துக்கொள்ளட்டும். 

                       #######







Saturday, April 18, 2020

சாயாவின் கதைகள்

ஜீவிஎம்மின் படங்களில் காஃபி சொப், அதில் எதிரும் புதிருமாய் ஒரு ஹேமானிக்காவும் சத்தியதேவுமோ அல்லது ஜெர்ஸியும் கார்த்திக்குமோ இல்லை என்றால் அது தலைவரின் பெயரில் வேறு யாரோ படம் எடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அது ஏன் கட்டாயம் ஒரு காஃபி சொப் சீன் என்று அடிக்கடி யோசித்திருக்கிறேன். அந்த சீனில் இருக்கும் பொஸ்ஸான மேஜிக்கை டீகோட் பண்ணுவதற்கு நிறைய தடவைகள் முயற்சித்து இருக்கிறேன். முடியவில்லை. எத்தனை தடவை பார்த்தாலும் அலுப்படிக்காத ஏதோ ஒரு எலிமன்ட் அந்த சீன்களில் சுற்றி சுற்றி மாயம் செய்து கொண்டு இருக்கும்.

காஃபி என்பதும் ஒரு வித போதைதான். என்ன கொஞ்சம் கலரான போதை. ஜிவிஎம் மேட் காஃபியின் கலவையைத்தான் கண்டு பிடிக்க முடியவில்லை. நம்மூர் சாயாவை போட்டு ஒரு ஆத்து ஆத்தியிருக்கிறேன். கீழே. சோ வாசித்துவிட்டு 'கப்'பென்று பிடித்துக்கொள்ளுங்கள்

டிரிங்கர்ஸ்

அண்ணர் கேத்திலின் வாயை பார்த்துக்கொண்டிருந்தார். ஆவி குபு,குபு என கொஞ்சம் வேகமாக வந்து கொண்டிருந்தது. அண்ணர் ஒரு பிளேன்ரீ அடிக்ரர். செயின் டிரிங்கர். ஒரு நாளைக்கு 10 தரம்  கொடுத்தாலும் குடிப்பார். இருந்தாலும் பாவம். குடுக்க யாரும் இல்லாத காரணத்தால் வீட்டில் இரண்டு தரம், வேலையிடத்தில் இரண்டு தரமுமாக ஒரு நாளைக்கு 4 தடவைகள் மட்டுமே கிடைக்கும். இப்போதைக்கு சமாளித்துக்கொள்கிறார். ஆனாலும் அதிலும் ஒரு பிரச்சினை இருந்தது. உரிய நேரத்தில் அது கிடைப்பதில்லை. 

அடிக்சன் லெவலில் இருப்பவர்களுக்கு அந்தந்த நேரத்தில் கிடைக்காவிட்டால் சைட் எபக்ட்ஸ் காட்டத்தொடங்கும், வேலை ஓடாது. சும்மா இருக்க சொல்லும்.இந்த நாட்களில் சும்மா இருப்பது சுலபமல்ல என்பது விளங்கியிருக்கும்.நித்திரை தூக்கி போடும்.மூளை இருந்தால் மந்துவது போல இருக்கும்.அட்மினிஸ்ரேசனில் டாப் லெவல் என்றால் கொதி வரும், அந்த கொதியில் சுட வைத்து  டீ போடலாம். வேர்க் புரம் கோமாயிருந்தால் கீ போர்டில் விரல்கள் எல்லாம் பட்டு பின்பக்கமாய் வளைவது போல ஒரு கலுசினேசன்,கை,காலுக்கு இரத்தம் ஓடாதது போல... ப்ளா ப்ளா ப்ளா... 

அண்ணர் பிளேன்டீக்கு அடிமையாகியது A/L படிக்கும் காலத்தில் விழித்திருப்பதற்காக என நினைக்கிறேன். அந்த நேரத்தில் இரவு 12 ஒரு மணிக்கெல்லாம்  குபுக், குபுக் என்று தண்ணி கொப்பளிக்கும் சத்தம்  கேட்கும். எலி பானைக்குள் விழுந்து தத்தளிக்கறதோ என்று போய் பார்த்தால் அண்ணர் குனிந்து அடுப்புக்கு ஆக்சிஜன் கொடுத்தபடி இருப்பார். அப்ப கொடுக்க ஆரம்பித்தது இப்பவும் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்.இடமும் காரணமும்தான் வேறு.

அவரின் அடிக்சன் சாதாரண லெவல் கிடையாது. இப்போதுதான் சகட்டு மேனிக்கு டீகப்பும் பிஸ்கட்டும் அல்லது மிக்சருமாக 

#மொபைல் போட்டோக்கிராபி 
#பிளாக்ரீ வித் பிஸ்கட்
#மாலை மங்கும் நேரம் 

வகையறா போஸ்ட்கள் எல்லாம் இன்ஸ்டாவிலும் எஃப் யிலும்  வண்டல் வண்டலாக கொட்டிக்கிடக்கிறதே. அதையெல்லாம் மொபைலில் ஸ்கிரீன்சொட் அடித்து ஒரு தனி போல்டரினுள் போட்டு வைத்திருக்கிறார். சாயா கிடைக்காத நேரங்களில் அதை ஓப்பன் பண்ணி ஓட்டோ ரொட்டேட் மோர்சனில் விட்டு ஏதும் வருகிறதா என சரித்து பார்த்துக்கொள்ளுவார். 

அண்ணரைப்போல ஒரு சிலர் மட்டும்தான் சுய தயாரிப்பில் குடிப்பவர்களாக இருப்பார்கள். எல்லாரும் ஜெஸ்ஸி பிங்மேன் கிடையாதே.  

பிங்மேனாய் இல்லாத டிரிங்கர்ஸ்க்கு இருக்கும் ஒரே பெரிய பிரச்சினை மேக்கிங். சொந்தமாக டீ போட்டுக்கொள்ள தெரியாது.நாகரீகமாய் ஆங்கிலத்தில் சொல்லிக்கொள்ளலாம்.இன்குளூடிங் மீ. 

"கடைசியாக அதை டிரை பண்ணும் போது சீனி கரையவில்லை. அப்புறம். அப்புறமென்ன பாலை விட்டு உப்பையும் போட்டு உப்புமா செய்து சாப்பிட்டேன்"

உலகின் மிக மோசமான பாவிகள் டீ போடத்தெரியதவர்கள்தான். அவர்களுக்காகவே...

 மேக்கர்ஸ்

வீடென்றால் காலை ஆறு மணி சூரியகதிர் யன்னலுக்குள்ளால் முகத்தில் அடிக்க மறுபக்கமாய் திரும்பி படுக்கும் போது ஈரக்கூந்தலை ஒரு கையால் துவட்டியபடி மறு கையில் கார்ட் சேப் பொறித்த  காஃபி மக்குடன் பட்டுப்புடவை சரசரப்பது தெரியும். பட்டு அருகில் வந்து  கூந்தலின் ஈரத்தை முகத்தில் உதறி விட்டு நித்திரையை குழப்பி  குட் மோர்னிங்குடன் கோப்பையை கையில் கொடுத்து எழுப்பும் போது  ....டாமிட்...

சோம்பேறிக்கழுதயே எழும்பி பல்ல மினுக்கிட்டு டீயை குடிக்ற வழியப்பாரு, எப்ப போட்டது பார், ஆறுது கிடந்து என்கின்ற அம்மாவின் டீ மேக்கிங் வகையறாவுக்குள்தான் இன்னும் இருப்பதால் முதல் பந்தியில் சொன்ன பெட் காஃபீ கான்சல். 

வீட்டை விட்டு வெளியில் போனால்  ஒவ்வொருவருக்கும் வாடிக்கையான ஒரு நட்சத்திர டீக்கடை இருக்கும். அதற்குள் போனால் எரிநட்சத்திரம் போல தகிக்கும்.எங்கள் ஊரில் எல்லாம் அப்படி ஒரு கடையில் கூட வாடிக்கை பிடிப்பது என்பது சாதாரண விடயம் கிடையாது. ஆறேழு கடைகள் இருக்கிறது. எல்லாமே முதல் தரம்  போகின்றீர்கள் என்றால் ஆர்டர் எடுக்க யாரும் வர மாட்டானா, எழும்பி போகலாமா, விடலாமா என்று பத்தாவது நிமிசம் யோசிக்கும் போது "மாஸ்டருக்கு என்ன தருவம்" என கேட்கும் ரகக்கடைகள். ஆனால் அந்தக்கடைக்கு நீங்கள் வாடிக்கை என்பதை உணர்த்தி விட்டீர்கள் என்றால் பிறகு அது சொர்க்கம் போல. அப்போது யாரும் உடனேயே ஆர்டர் எடுக்க வருவானா என கேட்கிறீர்களா? அதுதான் இல்லை. நாங்களே எடுத்து சாப்பிட்டு கொள்ளலாம். சாப்பிடும் வடைக்கும், குடிக்கும் டீக்கும் ஒரு கொப்பியில் கணக்கு போட்டு மாதக்கடைசியில் மொத்தத்தை கூட்டி அரைவாசிக்காசை கொடுக்க கூடிய ஒரு சொர்க்கம்.

அந்த வாடிக்கையை பிடித்து கொடுப்பது யாரென்று தேடிப்பார்த்தால்.....

காலை ஆறுக்கு கடையை திறந்து பாயிலரை போட்டு தண்ணியை கொதிக்க வைத்து, இரவு பூட்டும் வரைக்கும் அதன் 100 பாகை சீயில் அவிந்த அரைவாசி முகத்தை மட்டும் மறைப்புக்குள்ளால் பார்க்கலாம். அவர்கள் பெரும்பாலும் மறைப்பை விட்டு வெளியில் வருவதில்லை. அதிகம் பேசுவதில்லை.அவர்களுக்கு என்றொரு தனிகலவை இருக்கும். இரண்டு கையிலும் கப்பை வைத்து இடம் வலமாக இழுத்து ஆத்துவது மட்டும் மறைப்பின் மேலால் தெரியும்.

பெரும்பாலான தேநீர்கடைகளையும் , கூல்பார்களையும் கவனித்துப்பாருங்கள். ஒரே ஒரு டீ மேக்கரைத்தான் நிரந்தரமாக வைத்திருப்பார்கள். மற்றவர்களை அடிக்கடி தூக்கினாலும் டீ மேக்கர்ஸை மட்டும் மாற்ற மாட்டார்கள். ஏனென்றால் ஒரு டீ மேக்கர் ஒரு கடையை விட்டு போகிறான் என்றால் சீதேவி அந்தக்கடையை விட்டு அவனுடனே போகிறது என்பது ஒரு மரபுவழி நம்பிக்கை.

நான் போகின்ற கடையில் மேலே சொன்ன அடையாளங்களில் ஒரு புள்ளி குறையாமல் ஒரு டீ மேக்கர் முழுப்பெயர் தெரியாது.. யோகு ஆ .. என்றால் போதும்,  யோகுவின் கதையை பின்னால் சொல்கிறேன்.

வாடிக்கையான கடையென்றால் நுழைந்து என்ன வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை. டீயோ,பாலோ,பிளேன்ரி இஞ்சியா அல்லது சமஹனா , வித்  ஓ வித்தவுட் சுகர் இரண்டு நிமிடத்திற்குள் உங்கள் மேசையில் இருக்கும்.

அலுவலகங்கள் என்றால் குறைந்தது ஒரு டீ மேக்கரையாவது சொந்தமாக வைத்திருப்பார்கள். அந்த டீ மேக்கர்ஸ்களெல்லாம் கடவுள் போல. கடவுள்களுடன் யாரும் முரண்படுவது கிடையாது. அவர்களுக்கு ஒவ்வொருவரின் நாக்கு கிஸ்டரியும் அத்துப்படி. எந்த நேரத்தில் யாருக்கு என்ன டீ எந்த அளவில், என்ன கலவையில் கொடுக்க வேண்டும் என்ற அட்டவணையெல்லாம் மனப்பாடம்.
டிப்பார்ட்மென்ட் கெட் இடம் ஏதும் வேலை ஆக வேண்டியிருந்தால் கூட அந்த டீ மேக்கர்ஸ்தான் ஆகச்சிறந்த ஆபத்பாந்தவர்கள்.


டிரிங்கர்ஸ் மீட் மேக்கர்ஸ்

யோகுவின் கதைக்கு வரலாம். வயது ஒரு அறுபதுக்குள் இருக்கும். முடி காதுக்கு பக்கவாட்டில் நரைத்து உச்சியில் உதிர தொடங்கிவிட்டது. கிளீன்சேவ்.யோகுவின் கடைக்கு போகின்றவர்களில் யோகுவின் டீ யோ அல்லது பிளேன்ரீயோ குடிக்காமல் வெளியேறுவது கிடையாது. கடை முதலாளி யோகு என்று நினைப்பவர்கள்தான் அதிகம். ஆனால் அது உண்மை கிடையாது. கல்லாப்பெட்டிக்கு பக்கத்தில் ஐம்பொன் மோதிரத்தை விரலில் சுழட்டியபடி யாரும் தெரிந்தால் அவர்தான் கடை முதலாளி. முதலாளிக்கும் யோகுவுக்கும் நல்லதொரு அன்டர்ஸ்டாண்டிங் இருந்தது. மாத இறுதி என்றால் கொப்பியை தட்டி கடன் கணக்கை மண்டைக்குள் ஏற்றி கொண்டு காசு கொடுக்காவிட்டால் டீயில் உப்புத்தான் போடுவேன் எனச்சொல்லி சிரிக்கிற,  வியாபார தந்திரம் தெரிந்த நூற்றில் ஒரு ஆள் யோகு. 

காலை ஆறிலிருந்து மத்தியான சாப்பாடு வரைக்கும் யோகுவின் கை மேலும் கீழுமாய் டீ ஆற்றியபடியே இருக்கும். பிறகு மீண்டும் நான்கிற்குதான் கடை திறக்கும். சுற்றுவட்டாரத்தில் இருந்த கடைகளுக்குள் யோகுவின் கடையில் மட்டும்தான் எப்போதும் தண்ணி கொதித்தபடி இருக்கும். மற்ற கடைகளில் முதல் நாள் சுட வைத்த தண்ணியிலும் சில வேளைகளில் டீ போடுவார்கள். கேட்டால் அவர்கள் மட்டும் சுடுவார்கள். விஷயம் தெரியாமல் அந்த கடையின் டைம்லைனுக்குள் நுழைகின்ற டிராவலர்ஸ் எல்லாம் அதுதான் டீ என்று நினைத்து குடித்து கொள்வார்கள்.

கடை திறந்ததில் இருந்தே யோகுதான் அங்கு டீ மேக்கர். பத்து வருட அனுபவம். டீயின் எந்த புள்ளியில் எந்த சுவை இருக்கும் என யோகுவை கேட்டால் தெரியும். 

அந்தக்கடை அனேகமானவர்களுக்கு பிடித்து போக இரண்டு காரணங்கள். ஒன்று.யோகுவின் சுத்தம். அதற்கு உச்சரிப்பு கேட்டால்  சு...த்...த..ம் என்று அதைக்கூட எழுத்துக் 'கூட்டி' விட்டுத்தான் சொல்வார். தலைமுடி விழாமல் தலையை சுற்றிக்கட்டிய ஆரஞ்சுக்கலர் தேங்காய்ப்பூ துவாய். முக்கால் கை சேர்ட், பழுப்புக்கலர் வேட்டி ஆங்காங்கே தேயிலை கறைகள். அவ்வளவுதான் யோகுவின் தோற்ற உலகம்.

இரண்டாவது  காரணம், கடை திறந்தால் பூட்டும்வரைக்கும் யோகுவைப்போலவே தன் வேலையை செவ்வனே செய்கின்ற மிலேனியம் மேக்  பனசோனிக் எப்.எம்.ரேடியோ பெட்டி. யோகுவிற்கு எண்பது தொண்ணூறுகளின் பாடல்களில் பி.எச்.டி முடிக்கின்ற அளவு ஒரு நொலேட்ஜ் இருந்தது. ஆனால் இப்போது ரேடியோவைக்கேட்டாலே வெறித்தனமாக இருக்கிறது என்று யோகு அடிக்கடி புலம்புவதை காணலாம்.

அந்தக்கடையும்  யோகுவும் மெல்ல மெல்லமாய் அண்ணர் லெவலுக்கு என்னையும் அடிக்சன் லெவலிற்கு கொண்டு வந்தது. 

அண்ணைக்கு கடுஞ்சாயத்தில ஒரு டீ என்று யோகுவின் கை நீளும் போது நாக்கு அறியாமலேயே உச் கொட்டும். அங்கே பழகியது வீட்டில், ஆபிஸில் என்று எல்லா இடத்திலும் அதே கலவையில் டீ கேட்டது. கபெஃயின் லெவல் உடம்பெங்கும் கூடிக்கொண்டிருந்தது. ஒரு இரண்டு வருடம் அப்படியே யோகுவுடன் போயிருக்கும். திடீரென்று ஒரு நாள் பார்த்தால் கடை பூட்டியிருந்தது.

கடைவாசலில் 6*4 அளவில் ஐம்பொன் மோதிர முதலாளிக்கு பனர் அடித்துக்கட்டியிருந்தார்கள். அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் எல்லாம் ஆறிய பழைய தண்ணீரை கொண்டு வந்து வாசலில் ஊற்றிவிட்டு புதிதாய் சுட வைத்தார்கள். 

முப்பது நாட்கள் முடியும் வரை கடை திறக்கவில்லை. டீயை வெறுப்போடு குடித்த முப்பது நாட்கள் அவை.யோகுவின் டீ இல்லாமல் ஏதோ இழந்து விட்டது போல இருந்தது. அந்த கலவையில் எங்கேயுமே டீ கிடைக்கவில்லை. 

மீண்டும் கடையை திறந்தார்கள். ஐம்பொன்னின் மகன் வைரக்கல்லு மோதிரத்துடன் முதலாளி இடத்தினை  நிரப்பிக்கொள்ள.... யோகுவின் முகத்திலும் அன்றைய தினத்தின் டீயிலும் வழமையான உயிர்ப்பில்லை. கடைக்குள் கூட்டம் குறைவாகவே இருந்தது. பழைய முதலாளியை இழந்த கவலையாய் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். 

அன்றுதான் யோகுவிடம் கடைசியாக டீ குடித்தது.

மறுநாள் அதே நேரம், அதே இடத்தில் யோகு இல்லை. புதிதாய் நாலடி உயரத்தில் பிறவுன் கலரில்  நெஸ்கபே மிசின் வாங்கி போட்டிருந்தார்கள். காசு போட்டால்தான் டீயோ, காஃபியோ வரும்.ஊருக்குள் எங்கள் கடையில் மட்டும்தான் இருக்கிறது என்று வைரக்கல்லு ஏப்பம் விட்டது. கணக்கு கொப்பியை மெசின் ஆடாமல் இருக்க மேசைக்காலுக்கு அடியில் செருகியிருந்தார்கள்.

மெசினை எல்லா இடத்திலும்  வாங்கி கொள்ளலாம், யோகுவை எந்த இடத்திலும் வாங்க முடியாது என்பது அந்த மரமண்டைக்கு எப்போதுமே புரியபோவதில்லை. அன்றுதான் அந்தக்கடைக்குள் கடைசியாக கால் வைத்தது. 

ஊருக்குள் வேறு கடைகளில் எங்காவது யோகு வேலை செய்கிறதா என்று விசாரித்து பார்த்தேன்.ம்க்கும். எங்குமே இல்லை. ஒருவரின் வாழ்க்கை விபரம் என்று எதுவுமே தெரியாமல் அவரை தொலைத்து விட்டோமோ என்று உணர முடியுமா?. முடியும். யோகு அதற்கு உதாரணம். 

உஸ்தாட் ஹொட்டல் கரீம் பாய் போலவே யோகுவும் எங்கேயோ ஒரு இடத்தில், அதிகாலை பொழுதுகளில் தேநீர் தயாரித்து கொண்டுதானிருக்கும். நம்பிக்கை இருக்கிறது.

தேடிக்கொண்டிருக்கின்றேன்.

Subanallah.....



                                   ###########


#அற்பப்பிறவி

Tuesday, August 6, 2019

கருவாட்டு காவியம்

சந்தைக்குள் அதிகம் நுழைவது கிடையாது. அதிலும் மீன் சந்தைப்பக்கம் மிக அரிது. இருந்தாலும் செங்கம்மாவிற்காக அதனுள் போக வேண்டிய சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்பட்டது. 

மீன்சந்தைக்குள் நுழைந்து வாசலின் இடது பக்கமாக திரும்பினால் செங்கம்மாவின் வியாபார ஸ்தலம் தெரியும். மொத்த வியாபாரிகள் வரிசையின் முதலாவது இடம். இடது பக்கம் திரும்பாமலே யாரும் நேரே பார்த்துக்கொண்டு செல்கிறார்கள் என்றால் இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று செங்கம்மாவிடம் கடன்பட்டவராக இருக்கலாம் இரண்டு செங்கம்மாவிற்கு கடன்கொடுத்தவராக  இருக்கலாம். இரு தரப்பும் செங்கம்மாவை நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வது குறைவு. சொல்லப்போனால் செங்கம்மாவை யாரும் ஏறெடுத்து பார்ப்பது கிடையாது. வருகின்ற வாடிக்கையாளர்கள் குனிந்து அவளிடமிருக்கும் மீனையோ அல்லது கருவாட்டையோ பார்ப்பது வழமை. 

செங்கம்மாவை பற்றிக் கூறலாம்.
நல்ல முகவெட்டு.கீழ் முன் வரிசைப்பல்லில் இரண்டு பற்கள் புதிதாய் கட்டியிருந்தாள்.வித்தியாசம் தெரிந்தது. வாய்ப்புற்றுநோய் தொடர்பான ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டபின் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இதர பிற சேர்மானங்கள் போடுவதை நிறுத்தி இரண்டு வருடமாகிறது. 
கழுத்தில் எப்போதும் ஐந்து பவுணுக்கு குறையாத இரட்டைப்பட்டு சங்கிலி இருக்கும். இரண்டு பெரிய தோடுகள் அதன் பாரத்தில் காது இரண்டும் கீழ்பக்கமாக கொஞ்சம் இழுபடத்தொடங்கியிருந்தது. முக்கியமாக பச்சைக்கல் போட்ட பட்டாணி சைஸ் மூக்குத்தி. தவிர வலது கையில் ஒரு சோடி ஐம்பொன் காப்பு. வேறு ஆபரணங்கள் கிடையாது. அவ்வப்போது சுருட்டு அடிக்கும் பழக்கமுண்டு.ஆனால் வேலை நேரத்தில் கிடையாது. அனேகமாய் கறுப்புக்கலர் பருத்தி சேலைக்கு வெள்ளைக்கலர் பிளவுஸ் போட்டிருப்பாள். அதில் தெளிக்கும் வாசனைத்திரவியம் குடலைப்பிரட்டும் மீன் நாற்றத்திற்கு ஓரளவில் சாந்தி அளிக்ககூடியதாக இருக்கும்.
தலை நரைக்க தொடங்கி விட்டது. வயது கணிக்க முடியவில்லை. கல்யாணம் ஆகி விட்டதா ம்க்கும் தெரியவில்லை.. ஆனால் தன்னிடம் இல்லாத மீனை கேட்பவர்களுக்கு எதிர்பக்கம் கை காட்டி "மோளிட்ட வாங்கிட்டு போ" என்பாள். ஞாயிற்றுகிழமை தவிர்ந்த வாரத்தின் 6 நாட்களும் காலை 7.00 முதல் மாலை 4.00 வரை செங்கம்மாவிடம் மீன், கருவாடு முதலியன பெற்றுக்கொள்ளலாம்.

செங்கம்மாவுடன் சேர்த்து மொத்தம் 23 வியாபாரிகள் அந்த சந்தைக்குள் இருந்தாலும் அவர்களுக்கு எல்லாம் கல்லா நிறைவது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான். நன்றாக வியாபாரம் நடக்கும் நாளில் ஏன் செங்கம்மா வியாபாரம் செய்ய வருவதில்லை. அவள் குடும்ப பிண்ணனி என்ன என்பதெல்லாம் விடை தெரியா மர்மங்கள். சிலர் அவள் ஞாயிறுகளில் கோயிலுக்கு செல்கிறாள் என்பார். சிலர் அவள் இந்து அல்ல ஆண்டவர் ஊழியத்திற்கு செல்கிறாள் என்பார். இருந்தாலும் யாராலும் எதனையும் உறுதிப்படுத்தமுடியவில்லை.

செங்கம்மாவிடம் செதில் படிந்த பிறவுன் கலர் மணிபர்ஸ் ஒன்று உண்டு. அதனுள் ஒரு 1110 நோக்யாவுடன் நூறு இருநூறுகளுக்கு மேல் பணம் இருப்பதில்லை.
அந்த மணிபர்ஸை சாரி பிளவுஸுக்குள் செருவி வைத்திருப்பாள்.

அந்த 1110 விளிம்பில் ஒரு மெலிதாய் கத்தி வெட்டிய அடையாளம் இருக்கும். அதன் பின்னால் கூட ஒரு கதை இருந்தது. 
ஒரு தடவை செங்கம்மா மீன் நிறுத்துக் கொடுக்கும் போது தட்டு விளிம்பில் இருந்த 1110 நோக்யாவும் நிறுத்த மீனோடு போய் விட்டது. மீனை வாங்கிய கனவான் வீட்டு சட்டிக்குள் எல்லா மீனையும் போட்டு கழுவி விட்டு கத்தியில் வைத்து குறுக்காய் வெட்டும் போதுதான் ஏன் துள்ளுமன்டி வெட்டுப்பட மாட்டேன்கிறது என புரட்டி பாத்திருக்கிறார். பார்த்தால் 1110 கைகளை கோர்த்த படி ஆஃப் ஆகுவது தெரிய, அல்லோகலபட்டு ஆன் பண்ணி அதிலிருந்து தன் நம்பருக்கு கோல் பண்ணி பார்த்தால்....
 கனவான் போன் மின்னியது..... செங்கம்மா கோலிங் என்று.

அடித்துப்பிடித்து திரும்பவும் மீன்சந்தைக்கு போய் இடதுபக்கமாய் திரும்பி  போனைக்கொடுக்க,
"கறுமத்த இவடம் முழுக்க தேடிட்டு இருந்தேன். கொண்டா இங்கே என்று விட்டு போன் எடைக்கு சமனான மீனை தூக்கி அந்த கனவானிடம் கொடுத்திருக்கிறாள் நீதி தவறாத செங்கம்மா.

இந்த சம்பவத்தில் ஒரு விடயம் உங்களுக்கு இடித்திருக்கலாம். ஒரு கனவானிடம் எதற்கு செங்கம்மாவின் போன் நம்பர் இருக்க வேண்டும். 

செங்கம்மாவின் மைன்டுக்குள் ஒரு பெரிய டேற்றா பேஸ் இருந்தது. தன் வாடிக்கையாளர்களின் பெயர்கள் எல்லாம்  நம்பர்களிலேயே அந்த பேசில் பதிவு செய்து வைத்திருந்தாள். அனேகமானவர்களிடம் விற்கும் மீனிற்கு காசு வாங்குவதில்லை. செங்கம்மாவிடம் கடன் கொடுக்க வேண்டியவர்களும் செங்கம்மாவிற்கு கடன் கொடுத்தவர்களும் அவளின் அறிவுறுத்தலின் பிரகாரம் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வார்கள்.  கணக்கு அவர்களுக்குள்ளேயே தீர்க்கப்படும். இடையில் ஏதும் வில்லங்கங்கள் ஏற்பட்டால் மட்டும் இடப்பக்கம் திரும்பி முறையிடுவார்கள். ஆயிரம் இரண்டாயிரங்களில் தொடங்கி
ஒரு லட்சம் வரைக்கும் உடன் பணமாக செங்கம்மாவின் ஏஜண்டுகளிடம் பெற்றுக்கொள்ள முடியும். இதர பிற செங்கம்மாவின் வட்டிப்பொலிசிகளை அவர்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.  I agree பட்டனிற்கு பதிலாக அவர்களின் போன் நம்பரை மாத்திரம் 1110 ல் பதிவு செய்து கொண்டால் மட்டும் போதும்.

சந்தை நிர்வாகம் எக்ஸ்செப்சன் லிஸ்டில் செங்கம்மாவை வைத்திருந்தது. அதற்கு சில பல காரணங்கள் இருந்தது. மரியாதையை கொடுத்து அதனை வாங்க வேண்டும் முக்கியமாக மீன் சந்தைக்குள். ஒரு தடவை போனால் அதனை மீள பெற முடியாது. செங்கம்மாவிற்கு தமிழில் தெரியாத வார்த்தைகள் என்று எதுவும் கிடையாது. ஆனால் எட்டாம் ஆண்டை தாண்டியிருப்பாள் என்பதே பெரிய சந்தேகம். 

ஒரு தடவை புதிதாய் வந்த வரி ரிக்கெட் செக்கர் விஷயம் தெரியாமல் "காட்டனை ரிக்கெட்டை" என்றிருக்கின்றார். 
அவள் மீன் அள்ளிய கையாய் இருக்கிறது, கழுவிவிட்டு காட்டுகிறேன் என்றிருக்கின்றாள். இவர் இல்லை இப்போதே காட்ட வேண்டும் என்று ஒற்றைக்காலை தூக்கி சொறிந்திருக்கிறார். செங்கம்மா அலட்சியமாய் முடியாது வேண்டுமானால் பர்ஸினுள் இருக்கிறது எடுத்து பார்த்துக்கொள் என்றிருக்கிறாள்.அன்றிலிருந்து செங்கம்மாவின் டிக்கெட்டுக்கள் செக் பண்ணப்படுவதில்லை. 

செங்கம்மாவிற்கு சந்தையினுள் ஓரிருவரை தவிர எதிரிகள் தொகையே கணிசமாக இருந்தது. 

மீன் சந்தைக்குள் இரண்டு கருவாட்டுக்கடைகள் இருந்தது. கருவாட்டுக்கடை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் கருவாடு விற்பதற்கு நிர்வாகம் திடீரென்று தடை உத்தரவு போட்ட போது அந்த வருடம்  கருவாட்டுக்கடை எடுத்த அன்ரனியும் தாஸும் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டார்கள்.

செங்கம்மாவின் வியாபாரம் ஒரு மூலையால் ஆட்டம் கண்டது. பெரும்பாலானவர்கள் செங்கம்மாவின் கருவாட்டுக்காகவே அவளிடம் வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். அவளிடம் வாங்கிய கருவாடுகள் குழம்புக்குள் போட்டதும் அன்று பிடித்த மீன்கள் போலாகிவிடும். செங்கம்மாவின் பாரைக்கருவாட்டுக்கென்று தனிச்சுவை இருந்தது. ஒரு தடவை உண்டு விட்டால் நாக்கு தினமும் அது வேண்டும் என்று உச்சுக்கொட்டும். அந்த பதத்தில் கருவாட்டை பக்குவப்படுத்திக்கொள்வதற்கு தேவையான உரிய உப்புக்கலவைமுறை செங்கம்மாவிற்கு மட்டுமே தெரிந்திருந்தது. அந்த இரகசியத்தை அறிந்து விட வேண்டும் என்ற அவாவில் அவளிடம் வேலைக்கு அமர்ந்து இறுதியில் மூக்குடைபட்டவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது.

அவளிடம் கருவாட்டை மெயினாக வாங்கிவிட்டு  மீனை சைட்டாக வாங்குபவர்களே அதிகம். தடை உத்தரவின் பின்னர்
அந்த வருடத்தின் இறுதிப்பகுதிகளில் மேல் சாக்கில் சாதரண மீன்களைப்பரப்பி விட்டு கீழ் சாக்கிற்குள்  கருவாட்டை வைத்து விற்கவேண்டியிருந்தது. அனேகமானோருக்கு விடயம் தெரியாமல் செங்கம்மாவிடம் கருவாடு இல்லையே என்று முணுமுணுத்தவாறே அன்ரனி,தாஸின் கடைப்பக்கமாக நகரத் தொடங்கியிருந்தார்கள். நெருங்கிய வாடிக்கையாளர்கள் சிலருக்கு மட்டுமே செங்கம்மாவிடம் கருவாடு இருப்பது தெரிந்திருந்தது. அதைப்பெற்றுக்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கும் செங்கம்மாவிற்கும் இடையில் ஒரு இரகசிய வார்த்தை பரிமாறப்பட்டது.

"கண்ணில்லாத மீன் இருக்கா"

என்று கேட்டடால் செங்கம்மா எவ்வளவு வேண்டும் என்று கேட்டு விட்டு அக்கம் பக்கம் பார்த்து சாக்கிற்கு கீழ் துழாவி எடுத்து கொடுப்பாள். காலப்போக்கில் இரகசிய வார்த்தை நிறைய வாடிக்கையாளர்களுக்கு பரவ மீண்டும் செங்கம்மாவின் வியாபாரம் சூடு பிடிப்பதை அன்ரனியும் தாஸூம் கடைக்குள் இருந்து அவதானித்துக்கொண்டிருந்தார்கள்.

அன்றும் அப்படித்தான் கண்ணில்லாத மீனைக்கேட்டவனுக்கு ஒரு கிலோ நிறுத்துக்கொடுத்த மறு கணம் அவளின் இடம் நிர்வாகத்தால் ரெய்டு செய்யப்பட்டு சாக்கு கீழ் இருந்த கருவாடுகள் யாவும் மொத்தமாய் கைப்பற்றப்பட்டு மறு நாள் பத்திரிகையிலும் பிரசுரமாகியது. 

"சுகாதரத்திற்கு ஒவ்வாத விதத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கருவாடுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன."

இடப்பக்க மூலையில் செங்கம்மாவின் புளோர் பண்ணிய முகத்துடன் கருவாடு கைப்பற்றப்படும் புகைப்படம்.

செங்கம்மா ஆடிப்போய்விட்டாள். ரிக்கெட் செக்கர் திரும்பவும் அவள் இடத்திற்கு வரத்தொடங்கியிருந்தார். நடப்பவற்றை ஜீரணிக்க முடியாமல் இருந்தது. செங்கம்மாவின் வியாபாரம் மங்கி கொண்டு செல்வதை சந்தைக்குள் இருந்த அனைவரும் அவதானித்துக்கொண்டிருந்தார்கள். இதுதான் நேரம் என்று அவளின் கீழிருந்த சில ஏஜண்டுகள் சிலர் பணத்துடன் நழுவுவதும் பொய்க்கணக்குகள் ஒப்பிப்பதுமாய் இருக்க செங்கம்மாவின் டேற்றாபேசில் எரர் வரத்தொடங்கியிருந்தது. கைகளில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. முகங்களை முன்பு போல இனங்காண முடியவில்லை. 

அன்ரனியின் கடையிலும் தாஸின் கடையிலும் அடுத்தடுத்த நாட்களில் கூட்டம் அலை மோதத்தொடங்கியது. என்ன செங்கம்மா உன் கருவாட்டைப்போலவே இருக்கிறது என்று வேறு சிலர் அவளிடம் கேட்டார்கள். 

முதல் முதலாக சந்தேகம் முளை விட்டது. உண்மையிலேயே அவளிடம் கைப்பற்றிய கருவாட்டை அழித்தார்களா? என்று.எந்த ஆதாரமும் இல்லை. செங்கம்மா அமைதியாக இருந்தாள். அவ்வப்போது ஞாயிற்றுக்கிழமைகளிலும் வியாபாரத்திற்கு வரத்தொடங்கினாள். வருடம் முடிந்து கொண்டிருந்தது.

அடுத்த வருடத்திற்கு கருவாட்டுக்கடைகளை குத்தகைக்கு எடுப்பவர்கள் ஆரம்ப கேள்வித்தொகைக்கு மேலதிகமாய் தாங்கள் விரும்பும் கேள்வித்தொகையை எதிர்வரும் 31.12 ற்கு முன் பதிவுத்தபாலில் சமர்ப்பிக்குமாறு நிர்வாகம் பார்க்கும் இடமெல்லாம் விளம்பரம் ஒட்டியது. 

எப்படியும் அன்ரனி , தாஸ், செங்கம்மா மூவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்பது தெரிந்தது. இரண்டு கடையில் யாருக்கு எது போகுமென்று ஊகிக்க முடியவில்லை. அத்துடன் செங்கம்மா கடையை எடுத்தால் இன்னுமொரு பிரச்சனையும் இருந்தது அவள் கருவாட்டுக்கடைக்குள் வைத்து சாதாரண மீனை விற்பதற்கும் நிர்வாகம் அனுமதிக்க போவதில்லை. செங்கம்மா
என்ன செய்யப்போகிறாள் என்று யாருக்கும் தெரியவில்லை.

அதே நேரம் நிர்வாகத்தின் பின்பகுதிக்குள் செங்கம்மாவின் பெயரில் ஏதும் பதிவுத்தபால் வந்ததா என்று இறுதி நாள் வரை அலசப்பட்டது எந்த கடிதமும் வரவில்லை. அனைவரும் தலையை பிய்த்துக்கொண்டார்கள். தாஸும் அன்ரனியும் நாளை தமக்குத்தான் கடை என்று கொக்கரித்தார்கள். 

மறுநாள் பதிவுத்தபால்கள் உடைக்கப்பட்டது.  செங்கம்மாவைத்தவிர அனைவரும் அந்த இடத்தில் கூடியிருந்தார்கள். முடிவுகள் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.

அன்ரனிக்கோ அல்லது தாஸிற்கோ கடை கிடைக்கவில்லை.

அவர்களின் கேள்வித்தொகையிலும் பார்க்க ஒரு ரூபாய் அதிகம் கோரப்பட்டு இருந்த ஒரு பதிவுத்தபால் இருந்தது. 

மறுநாள் இரு கருவாட்டுக்கடைகளுக்குமுரிய புதிய உரிமையாளரின் திறப்பு விழா .  அது திறப்பு விழாவா? என்று சந்தேகப்படாத அளவிற்கு கடைக்கதவு திறந்திருந்தது . எட்டிப்பார்த்தால் விற்பதற்கு கருவாடு எதுவும் இல்லை. கருவாடு  வாங்க வந்தவர்களிற்கு உள்ளிருந்து பதில் மட்டும் வந்தது.

"அம்மாட்ட வாங்கிட்டு போங்கோ"


                                **************











#அற்பபிறவி

Sunday, May 27, 2018

முடித்தேங்காய்கள்

அண்ணருக்கும் தேங்காய்க்கும் ஆறு வித்தியாசங்களும் ஒரு ஒற்றுமையும் கண்டு கொள்ளக்கூடியதாக இருந்தது.

ஒற்றுமை - இரண்டுமே உரித்து வைத்தால் ஒரே மாதிரி இருக்கும்.
பங்குனி வெயிலும், மழையும் சேர்ந்து வரும் போது ஒரு மப்புக்காலநிலை அடிக்கும். அதை ஒத்த ஒரு நிலையில்  "சந்தைக்கு தேங்காய் விற்று வருகிறேன்" பேர்வழி என்று அண்ணர் ஈஸ்டனில் அரைக்காற்சட்டையும் சேட்டுமாய் காலில் பத்தாம் நம்பர் டி.எஸ்.ஐ பாட்டாவுடன் புறப்பட்டு போவதை பார்க்க கொள்ளை அழகாயிருக்கும்.

இப்போதெல்லாம் சந்தையில் தேங்காய் எருமை விலை போகிறது. அண்ணருக்கும் ஈஸ்டனுக்கும்  ஒரு ரேட்டை போட்டு விற்றால் வரும் காசு அவர் கொண்டு போய் விற்கும் தேங்காய் காசிலும் பார்க்க குறைவாய்தான் இருக்கும். அதனால் அண்ணரிலும் பார்க்க அதிக கவனத்துடன் தேங்காய் பை சைக்கிளின் பின் கட்டப்பட்டிருக்கும். 

கொண்டு சென்றதை விற்று வருவதற்கிடையில் முற்கதை சுருக்கத்திற்கு வரலாம் 

தேங்காய் விற்கின்ற புறசெஸ்  மட்டும்தான் அண்ணரினுடையது. தேங்காய் உரிப்பது  வேறு யாராய் இருக்கும்?.தேங்காய் உரிக்கும் போது தொடராய் பொச்சு எடுப்பது என்பது ஒரு கலை. அண்ணர் ஒவ்வொரு பொச்சாய் கையில் கழட்டி எடுத்துவிட்டு பாரை சரியில்லை ஆடுகின்றது என்று உரித்த ஒரு பொச்சை எடுத்து அதற்கு உண்டு  குடுப்பார். அடுத்த தேங்காயின் மூன்றாவது பொச்சை உரிக்கும் போது முதலாவது பொச்சு அறுந்து விழும். ஒரு விரக்தியோடு தேங்காயை பிரட்டி குத்துவார். பொச்சு பிரியாத வரம் கேட்கும். விரக்தி கோபமாக மாறும். போய்விடுவார். தேங்காய் நாலு  பொச்செடுத்த நிலையில் அரை நிர்வாணமாய் பாரையில் குத்தப்பட்டிருக்கும்.

தேங்காயின் தேவை கருதி அது உரிக்கும் போது கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

கோயிலுக்கு நேர்த்தி வைத்து தேங்காய் அடிப்பதாக இருந்தால், அடிப்பது சிதறு தேங்காயாக இருந்தாலும் அதற்கு தலையில் முடி இருக்க வேண்டும். "சொட்டைத்தேங்காய்களை கடவுள்கள் ஏற்பதில்லை" என்று காவோலை ஏடுகளில் எழுதி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது.

அதே காவோலை ஏடுகளின் வேறு சில பக்கங்களில் தேங்காய் தொடர்பாய் இருந்த சில விடயங்கள் வருமாறு,

01.அர்ச்சனை தட்டில் வைக்கும் தேங்காயின் கண் - கண்ணில்  தெரியக்கூடாது 
02.தேங்காய் உடையும் போது சரி பாதி சமனாய் உடைந்தாலும், உடைந்த தேங்காய்க்குள் பூ இருந்தாலும் எண்ணிய காரியம் பழமாகும்.
03.தவறி உடைந்த தேங்காய் அழுகி , முடி கழண்டு போய்விடின்  எல்லாமே நாறிப்போக போகிறது என்று அர்த்தப்படும்.

ஏட்டின் அடியில் காஷ்ரேக் போட்டு இப்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது. #எக்காரணம்கொண்டும்உடைத்தபாதிகளை மீண்டும்பொருத்திபார்க்ககூடாது.

                       ************
அண்ணரின் பிஸிக்ஸ் கிளாஸ் பின் வாங்கு (க)விதிகள் பேசும்.காந்தவிதிகளில் வானெழிலியின் கண்கள்  வடமுனைவாயிருக்கும் போது என் கண்கள் தென்முனைவாயிருக்க வேண்டாம், குறைந்தது துருப்பிடித்த தகரமாயிருந்தாலே போதும், கோபாலா கிருஷ்ணா, கோவிந்தா  கவர்ந்து இழுக்க அருள் புரியாயோ! என்று   வைத்த  நேர்த்தியில் வா.னெ.ழி.லி அடிக்கடி பார்ப்பது போலிருக்க அண்ணரால் நம்ப முடியவில்லை. உடனடியாய் முடியாவி்ட்டாலும் இரண்டு நாளுக்குள் செருக்கற் பிள்ளையாருக்கு  தேங்காய் உடைப்பதாக  மனசுக்குள் நினைத்து கொண்டார்.  

இரண்டாவது நாள், நாலு தேங்காய் முடியில்லாமல் உரித்து ஐந்தாவது அரைவாசி முடியுடன் உரித்து ஆறாவது ஓரளவு முடியோடு உரி்த்தாலும் ஒரு கண் முடிக்குள்ளால் தெரிய அதை பிள்ளையாருக்கு உடைக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்து விடுபட்டு,கண் பார்க்க வேண்டும் என்று வைத்த நேர்த்தி - தேங்காய்க்கு கண் தெரிந்தால் என்ன? கால் தெரிந்தால் என்ன? என்று நினைத்து சிரித்தபடியே விநாயக முற்றத்தில் தேங்காயை சிதறடித்தார்.

ஒரு தடவை விநாயகர் சிவனின் தலையை பலியாக கேட்க, சிவன் தனது சிரசின் அம்சமாக படைத்ததே இந்த தேங்காயாம்.

அன்றிலிருந்து தேங்காய் சிவனின் தலையாகவே கருதப்படுகிறது. என்ன இருந்தாலும் அண்ணர்  அதை பழித்திருக்க கூடாது.

அண்ணரின் அந்த காதலுக்கு கடைசி வாங்கிலேயே கல்லறை கட்டப்பட்டது.

வானெழிலி அண்ணரை கடைசிவரை பார்க்கவில்லை என்ற விசயமே... அண்ணருக்கு கடைசிப்பந்தியில்தான் தெரிய வந்தது.

                          **********

அண்ணர் தேங்காய் உரிப்பதில் எக்ஸ்பேர்ட் ஆகாவிட்டாலும் விற்பதில் ஒரு புறபெசனல் லெவலை தொட்டுவி்ட்டிருந்தார். அவர் படித்த படிப்புக்கும் பார்த்த வேலைக்கும் சம்மந்தமே கிடையாது என்றாலும் எப்படி இவ்வளவு முன்னேற்றம் என்ற ஒரு யோசனை ஆரம்பத்தில் இருந்தே மண்டைக்குள் குறட்டியது.
மேசையில் இரண்டாய் உடைத்து வைத்த தேங்காய் பாதிகளோடு 360டிகிரியில் கமரா சுழர எதிரும் புதிருமாய் இருந்தவாறு கண்ட பேட்டியில்
"சொல்லுங்க மிஸ்டர் தேங்காய்க்கண்ணன் எப்படி உங்களால?"

"தலைமுடியும் தேங்காய் முடியும் ஒண்ணுதான் 
இரண்டுமே நம்மள கேக்காமலே கழண்டுக்கும்"

என்ற ஒரு அருமையான தத்துவத்தோடு

ஒரு மாறுதலுக்காக  இனி வருகின்ற சில பராக்கள் அண்ணரின் வியூவில்...

தேங்காய் விற்கும் படலம் 
நாள் - 01
ஈஸ்டனின் பின் கரியலின் ஒரு பக்க கம்பி ஒட்டு விட்டுப்போயிருந்தது. பத்து தேங்காய்க்கு மேல் கட்டமுடியாவிட்டாலும் ஒரு அவாவில் எக்ஸ்ராவாய் ஐந்தை போட்டதில் காண்டில் ஆட்டம் காட்டியது. "கல்லு ரோட்"  வேண்டுமென்று போராடியதில் கல்லை மட்டும் போட்டுவிட்டு ரோட்டை போடாத ரோட்டில் போகும் போது தேங்காய்கள் ஒன்றோடு ஒன்று முட்டி கடகடத்தது. தேங்காய் உடைந்தாலும் பரவாயில்லை, இளநீர் ஊற்றினால் அவமானமாகிவிடும்.மூளையே கவனம் தேவை என்று மனசு அடித்துக்கொண்டது.

தேங்காய் சந்தைக்குள் நுழைந்து சைக்கிளால் இறங்குவதற்குள் தேங்காய் பை 
தொலைய...
50 கிலோ சிவப்புக்கோடு போட்ட பிறீமா பாக் எங்கே என்று தேடியதில்
ஒரு தேங்காய் வியாபாரியின்  தேங்காய் குவியலோடு கொட்டப்பட்டு 2 டொக், 4டொக், 6டொக், ....14டொக், 15

(வருகின்ற "டொக்"  சத்ததில் இருந்து ஒரு தேங்காய் நல்லதா இல்லை கெட்டதா என்பதை ஒரு புறபெசனல் லெவல் தேங்காய் வியாபாரியால் கண்டு கொள்ள முடியும்.) 

"அறுபது ரூபா தம்பி  இண்டைக்கு  போகுது, அப்ப எண்ணூத்தி நாப்பது ரூபா," 

58 செக்கன்களே தாண்டிய ஒரு இறந்தகால நிகழ்வில் இரண்டு செக்கனை கணக்குபோட எதிர்காலத்திடம் கடன் வாங்க வேண்டியிருந்தது. 

"அண்ணை 15 தர 60 என்டா 900 எல்லோ. "

"ஓம் தம்பி! 15வது சின்னத்தேங்காய் அத கழிச்சு விட்டு பாருங்கோ"

(லெசன் நம்பர் - 01 பெரிய தேங்காயையும் சின்ன தேங்காயையும் ஒன்டா கலந்து விக்க கொண்டு  போக கூடாது.)

தேங்காய் விற்கும் படலம்
நாள் -05

இறங்க முதலே பையை இறுக்க பிடித்துக்கொண்டேன். 

ஒரே சைசில் இருந்த பதினைந்து தேங்களையும் நிலத்தில் கொட்டிய போது,சுற்றி கூட்டம் அம்மியது.

"நாப்பது படி எத்தினை பதினைஞ்சே கிடக்குது"

"இல்ல"

நாப்பத்தைஞ்சுக்கு எடுக்கட்டே"

"மக்கும்"


"இன்டைக்கு  ஐம்பதுதான் ஆக கூட, நான் ஐம்பத்திரண்டுக்கு எடுக்கறன்." 

"அண்ணை பேக்காட்டுப்படாதீங்கோ. ஐம்பத்தைஞ்சென்டா தாங்கோ, இனி உங்கட விருப்பம்"

ஐம்பத்திரண்டு கேட்டவனை பார்த்து சிரித்துக்கொண்டே ஐம்பதைஞ்சுக்கு தலையாட்ட - சோல்ட்.டொட்

ஒரு விடயம் மட்டும் புரியவில்லை ஐம்பத்தைஞ்சுக்கு வாங்கியவன் தேங்காய் பையை ஏன் ஐம்பத்திரண்டுக்காரன் தூக்கி கொண்டு போக வேண்டும்.

(லெசன் நம் - 02 உன்னையும் கொண்டு போற தேங்காயையும் தவிர வேற எவனையும் நம்பாத)


தேங்காய் விற்கும் படலம் 
நாள் 08

சந்தை நிறையவே அடித்து போட்டது. 
தேங்காயின் வளைவு நெளிவுகள், பெருப்ப சிறுப்பங்கள் ஒவ்வொன்றாய் புரிய ஆரம்பித்தது.
நிறைய விடயங்களை ஸ்கிப் பண்ண பழகியிருந்தேன்.

அறுநூற்றி இருபது கணக்கிற்கு அறுநூறை தந்து சமாளித்த பல்செட்டில் காவி படிந்த கிழவி.

இருபது ரூபா வரிக்காசிற்கு டிக்கெட் கிழிக்காத வரிய(இ)றுப்பாளர்

கழிக்கப்பட்ட பதினைந்தாவது தேங்காய் வீடு போகும் போது கூடைக்குள் இருந்தது. ஐம்பத்திரண்டு, ஐம்பத்தைந்துக்காரர்களை கண்டு கொள்வதே இல்லை. 

தேங்காய் விற்கும் படலம் - எத்தனையாவதோ நாள்.

ஒரே சைசில் உள்ள தேங்காய்ளோடு கழித்து விடுவதற்கு எந்த சந்தர்ப்பமும் கொடுக்காமல் தேங்காயை கொட்டி விட்டு நிமிர எதிரே

"வானெழிலி"

பத்து தேங்காய் நாளைக்கு செருக்கலுக்கு ... கொஞ்சம் பொறு .... 

நெற்றியில் குங்கும பொட்டு.!
"கல்யாணமாகி விட்டதா என்ன?
கேட்க வேண்டாம்!.

"என்னை தெரியுமா? 
உன் கூடத்தான் படித்தேன் "
படித்த நூறு பேருக்குள் என் முகமா? ஞாபகம் இருக்கும்.
கேட்க வேண்டாம்.

"இப்பொழுது என்ன செய்கிறாய்?"
கேட்க வேண்டாம்!

"தெரிந்தும் தெரியாதது  போல் காட்டிக்கொள்கிறாளா. படிக்கும் போது அடிக்கடி பார்த்து தொலைப்பாயே"

என்ன கேட்பது என்று தெரியவில்லை. 

"தேங்காய் என்ன விலை?"
அவளே கேட்க ஆரம்பித்தாள்.

முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.
நடிக்கி்றாளா,இல்லை.

"நாப்பது ரூபா"
படித்த போது இருந்ததை விட முகத்தில் ஒரு முதிர்ச்சி தெரிந்தது. இருந்தாலும் எங்கே ........

"குறைக்கேலாதா"

"முப்பத்தைஞ்சு"

காசை இரண்டு தடவை எண்ணி தந்தாள்.
தேங்காயை பைக்குள் எண்ணி போட்டுக்கொண்டாள்

...........பார்க்கிறாள். புரியவில்லை.

போகும் போது சிரித்தாள்.


"வானெழிலி உனக்கு வாக்குகண்ணா?"
"கேட்கவில்லை"



########











#அற்பபிறவி#