About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Thursday, March 26, 2015

காமிக்ஸோடு ஒரு காதல்

இந்த பதிவுக்கு முதல் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்து வைத்திருந்த தலைப்பு
  
    "காமிக்ஸோடு ஒரு கள்ளக்காதல்"

தலைப்பை பார்த்தவுடன் வாசிக்க வேண்டும் என்றே சில தலைப்பை வைத்திருப்பார்கள்.குமுதமோ ஆனந்த விகடனோ சரியாய் நினைவில்லை .அதில் "ப்ளீஸ் இந்த பக்கத்தை படிக்காதீர்கள்"  என்ற தலைப்பின் கீழ் கடைசிப்பக்கத்தில்  கிசு கிசு  வரும்.புத்தகத்தை எடுத்து கடைசி பக்கத்திலிருந்துதான் நான் வாசிக்க தொடங்குவேன்
தும்பு நடிகைக்கும் கம்பு நடிகருக்கும் இடையில் நடந்தது என்ன? என்று எழுதி இருப்பார்கள்.அது யார் என்று கண்டுபிடிப்பதில் ஐயாவுக்கு ஒரு த்ரில் .

அதைப்போல இந்த தலைப்பை பார்த்து  விட்டு லிங்கை கிளிக் பண்ணி ஒரு எதிர்பார்போடு  உள்ளே வருகின்ற சில
வாசக நெஞ்சங்களுக்கு உள்ளீடு சப்பையாய் தோன்றலாம்.

ஏனென்றால் இது இன்றைய காலகட்டத்தில் இருக்கும் எல்லாருக்கும் பிடிக்காது.ஏன் சிலருக்கு இது என்ன இழவு என்றே தெரியாமல் இருக்கும். ஆனால் என்னை போலவே ஒன்றிரண்டு இருக்கும் என்று எனக்கு தெரியும்.அந்த அவர்களுக்காக மட்டும்.மற்றும்படி இதில் சொந்தகதை,சுயபுராணம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமே.

கறுப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு தலையில் தொப்பியோடும் கோட்டோடும் ஒரு அநாயசமான நடை நடக்கின்ற அந்த மனிதன் நகருக்குள் பயன்படுத்துகின்ற பெயர் Walker. கூடவே ஒரு நாயும்-பெயர் டெவில்.பின்னால் நின்று யாராவது துப்பாக்கி தூக்கினாலும் மின்னல் வேகத்தில் சுழன்று அந்த மனிதனின் இரண்டு துப்பாக்கிகளும் முழங்கும்.சாவே அற்ற மனிதன்-மாயாவி.




அமெரிக்கப்பதிப்பகம் ஏதோ  ஒன்றின் படைப்பு.தமிழில் ராணிக்காமிக்ஸினூடாய் என் ஜனனத்துக்கு சில தசாப்த்தங்களுக்கு முன்னரே அறிமுகமாகியிருந்தது .எனக்கு அறிமுகமாகியது-2003 என்று நினைக்கின்றேன்.மாயாவிதான் அறிமுக ஹீரோ

மாயாவி என்ற கரெக்டரோடு சேர்த்து அதற்கு பின்புலமாய் நிறைய விசயங்கள் படைக்கப்பட்டிருந்தது.மண்டையோட்டுக்குகை.ஈடன் தீவு,தங்ககடற்கரை,மரவீடு,நான்கு இனத்தவர்கள்.மனைவி டயானா.மகன் ரெக்ஸ்.குதிரை ஹீரோ. நாய் டெவில்.

கோதாரி விழுந்தது.இதை வாசித்த மயக்கத்தில் அந்த நேரத்தில் வீட்டில் வளர்த்த ஒரு பெட்டை நாய்க்கு டெவில் என்ற பேர் வைத்திருந்தேன்.அதுக்கு பேர் பிடிக்கவில்லையோ அல்லது இங்கிலிஷ் விளங்கவில்லையோ தெரியாது.உஞ்சு எண்டால் மட்டும் திரும்பி பார்க்கும்.கொஞ்ச நாட்களில் அது பக்கத்து வீட்டு 'சோட்டா பீமோடு' ஓடிப்போய் விட்டது. நன்றி கெட்டது.

அந்த பின்புலங்களில் ஏற்படும் ஆபத்துகளை தவிர்கவோ அல்லது நல்லவர்களுக்கு உதவி செய்வதற்காகவோ மாயாவி என்ற சூப்பர் ஹீரோ வருவார்.

இதன் ஒரிஜினல் வடிவம் எட்டாம் ஆண்டு படிக்கும் போது பந்தம்.(Phantom) என்ற பேரில் கலர் ப்ரிண்டில் ஸ்கூல் லைப்ரரியில் எனக்கு கிடைத்த போது புரிந்தது.ராணிக் காமிக்ஸ் நிறையை பக்கங்களை கட் பண்ணி விட்டிருந்தது.

ராணியில் வெளி வந்த இதர பிற இத்யாதி ஹீரோக்களில் அடுத்து அதிகம் பிடித்தது என்னவோ பிளாஷ்கார்டனின் விண்வெளி சாகசங்கள்.இது தவிர 007,கார்த்,மாடஸ்தி என்று நிறைய.வீட்டிலேயே ஒரு நூறு புத்தகத்துக்கு கிட்ட சேர்த்து வைத்திருந்தேன் அப்போது.கறையான் வாசித்து தள்ளி விட்டது.

அதன் பின் லயன்,முத்து காமிக்ஸ் அறிமுகமான போது ராணியின் தரம் புரிந்தது.

லயனும் முத்துவும் ஒரே மரத்தின் இரு கிளைகள்.கதைக்கு சுவாரசியமாய் எடிட்டர் விஐயனின் ஹாட்-லைன் இருக்கும்.



லயன் டெக்ஸ்வில்லரை கொண்டுவர முத்து டைகரை கொண்டு வந்திருந்தது.கௌபாய்களின் தலையாய தலைவர்களாய்.
மாயவியின் முகமூடி இல்லாவிடில் அது டெக்ஸ் என்பது போல இரவுக்கழுகு வின் கரெக்டர் கிரியேட்டாகியிருந்தது அரிஸோனாவின் பாலைவனத்தில்.
கூடவே கிட் கார்ஸன் ஆஸ் வெள்ளி முடித்தலையார்.கிட் ஆஸ் சின்ன கழுகார்.இவர்களுடன் டைகர் ஜாக்.இதன் கிரியேட்டர்-Sergio Bonelli



அபேச்சோக்களும்,செவ்விந்தியர்களும் அடிபடும் போது நவஜோ தலைவர் நடுவில் நிற்பார்.

முத்துவில் வெளியான டைகரும் ஒரு தலைசிறந்த கௌபாய்.ஆனால் ரியாலிட்டியான கௌபாய்.டெக்ஸை போல அசாத்தியமான சில வேலைகள் டைகரின் ப்ரேமுக்குள் வருவதில்லை.டைகரின் பிண்ணனி முற்றிலுமே வேறுபட்ட ஒன்று.எப்போதுமே

இதில் பக்காவான காமெடி என்னவென்றால் வீட்டிலுள்ள என்னை விட நாலு வயசு மூத்தது இப்பவும் சில வேளைகளில் தான் இரவுக்கழுகு என்ற ரீதியிலும் நான் டைகர் என்ற ரீதியிலும் கொழும்பிலிருந்து என் எல்லைக்குள் வர வைபரினூடாய் புகைசமிஞ்சை அனுப்பி அனுமதி கேட்பதுதான்.
நானும் பாவம் என்று நிராயுதபாணியாய் வர சில வேளைகளில் அனுமதி கொடுப்பதுண்டு.

ஏழாம் ஆண்டுக்கு பின்னர் வந்த கால கட்டத்தில் தான் பெரும்பாலான எல்லா லயன் முத்து கதைகளையும் சொந்தமாக வாங்க தொடங்கினேன்.அதுக்கு முதலே வாங்கி இருக்கலாம்.யாழ்பாணக்கடைகளில் இருந்த விசயம் தெரியாது.கையில் காசும் கிடையாது.

வீட்டில் அதை வாசிப்பதுக்கு தடையில்லாவிட்டாலும் காசுகொடுத்து வாங்குவதற்கு பகிரங்கமாக தடை விதிக்கபட்டிருந்தது.அண்ணண் ஏனைய விசயங்களில் போட்டுக்கொடுத்தாலும் இதில் அமர்த்தி வாசிக்க காரணம்.ஆளுக்கு நான் வாங்கிய புத்தகத்தை வாசிக்க குடுக்க மாட்டன் என்று தெளிவாய் தெரியும்.

இதனால் நான் ஒவ்வொரு தடவையும் களவாய் வாங்கிய காமிக்ஸின் எண்ணிக்கை என் லைப்ரரியில் கூடியது.

பெரும்பாலான எல்லா புத்தகமும் வாங்கி முடிய மிஞ்சியிருந்தது ஒரே ஒரு ராட்சத சைஸ் பெரிய புத்தகம்-கௌபாய் ஸ்பெஷல்-என் ஒட்டு மொத்த உலகமும் அதில் இருக்க.விலையும் அந்த நேரத்தில் எனக்கு ராட்சத விலையாயிருக்க


ஒவ்வொரு தடவை அந்தக்கடைக்கு போகும் போதும் அதை தூக்கி!

" "அண்ணே! இது என்ன விலை?"

"....."

மறக்காமல் ஒரு பைசா குறைக்காமல் அதே விலையை சொல்லுவான்.

ஒரு தடவை பொறுக்க முடியாமல் இருந்த காசெல்லாம் ஒன்று திரட்டி வாங்கி விட்டேன் அதை .வீட்டுக்கு கொண்டு வந்து அண்ணருக்கு பாதி விலையை சொன்னேன்.அம்மாவுக்கு அவனுக்கு சொன்னதில் பாதியை சொன்னேன்.

இரண்டு பேரும் நம்பினார்களா.?நம்பினாற் போல நடித்தார்களா !?தெரியாது.

ஆனால் இன்று வரை அதன் நிஜ விலை இருவருக்கும் தெரியாது.(அன்பு அண்ணரே இதை நீர் வாசிக்கும் போது உள்ளுக்குள் கறுவலாம்.ஆனால் நினைவில் கொள்ளவும்.புதிதாய் இரண்டு புத்தகம் நேற்று வாங்கினேன்.)

இப்படி இன்னுமொரு சம்பவமும்.இன்னும் நிறைய ஹீரோக்களும் இருப்பதால்

இந்த காமிக்ஸோடு ஒரு கள்ளக்காதல் அடுத்தவாரமும் தொடரும்......


Friday, March 13, 2015

கெமிஸ்ரி


Practical no 1 - அறிமுகம்

கெமிஸ்ரிக்கும் எனக்கும் நல்லதொரு கெமிஸ்ட்டரி நிலவியது என்றால் இது வெடியனின் மீதி தொடரா என்று சனம் நினைக்கும்.அப்படி இல்லை.

உதாரணத்துக்கு பத்தாம் வகுப்பில் ஐந்து அன்னயனோட பேரை பட் பட் என்று சொன்னேன்.ஆனால் கற்றயனோட ஒரு பேர் கூட ஞாபகம் இருக்கவில்லை .

இதை விட இன்னுமொரு வகையான கெமிஸ்ரி யும் இதோடு சேர்ந்தது.

இரசாயன தாக்கமோ கருத்தாக்கமோ இல்லாத ஒரு வினோத தாக்கமுடைய கெமிஸ்ரி.

"Some people have it.An attraction that can't be quantified or explained."-dexter

முதலில் சொன்ன கெமிஸ்ரிக்கும் எனக்கும் இருந்த அந்த துக்கடாவான தொடர்பை சொல்ல வேன்டும்.

பத்தாம் ஆண்டில இருக்கும் போது "ஹலோ கீ லைக் பென்ஸ்ஸில் பத்மினி சோப் போடேக்க " எண்டது பொட்டாசியம்,சல்பர் ஐ  ரிஃபர்  பண்ணுது என்டது மட்டும் பட்டையடிச்சு ஞாபகம் நிண்டது.

எக்சாமில அணுக்கொள்கையை கேட்க

அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்ட டால்ரனை நிராகரித்து

"அனுவை பார்க்கவோ, மறக்கவோ முடியாது" இனி என்டு எழுதின ஆள் நான்.

அனு-அனுச்சித்திரா.நேர்சரி படிக்கேக்க கனக்க தரம் எனக்கு குண்டூசியால எல்லாம் குத்தினவள். எட்டாம் ஆண்டில குத்தின குண்டூசிய தந்துட்டு போனபோது விரசமில்லாத அந்த நட்பு.காதலில்லை.
 அடிக்கடி இப்படியான வசனங்களில் என்னையறியாமல் வெளிப்பட்டதா? சந்தேகம்.

பதினோரவதாண்டில் பேனாக்குள் இருந்த பிட்டும் முன்னால் இருந்தவன் கீறிய லூயியின் போன்டும் காப்பாற்றிவிட்டது.

ஏஎல்லுக்கு போன போது கொக்காவில் ரவர் உச்சியில் ஏறி நின்று கொண்டு - கீழே விழுந்தால் வலிக்குமா? என்று கேட்க வைத்தது இந்த கெமிஸ்ரி.

தொடக்கத்தில்
அன்னயன் மட்டும் எப்போதும் ஞாபகம் நின்றதற்கு மிக முக்கிய காரணமே எல்லாம் அதில் மைனஸ் பாயிண்ட் என்பதுதான்.
கற்றயன் + ஆச்சே.

முதல் பிரக்டிக்கலில் குறூப் பிரித்து விட்டு இரண்டாவது பிரக்டிக்கலில் கூம்புக்குடுவையை குனிந்து பார்த்துக்கொண்டிருந்த போது அதை சரக் என்று இழுத்து

"இது என்ன வைச்சு வடிவு பார்க்கவா உனக்கு தந்திருக்கு"

"இவள் என் குறூப்பா?"
திடீரென்று என் கொக்காவில் ரவரின் உயரம் இன்னும் கொஞ்சம் கூடியது.

முழுப்பெயர் - ஆகாயா.
எல்லாரும் இவளை ஆகா! ஆகா! என்று போற்ற வேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு பேரை வைத்திருக்கலாம்.
அதற்கேற்றது போலவே லந்தனைட்ஸ் அக்டி னைட் வரிசை மூலகம் கூட முதல் நாள் கிளாசில் சொன்னாள்.ஊர் பாரட்டியது ஆகா! என்ன அறிவு என்று.
நான் அன்றிலிருந்து நிமிர்ந்து கூட பார்பது கிடையாது.

"இல்லை அடில கிளாஸ் வெடிச்சது போல இருக்கு"

"உனக்கு என்ன கழுத்துக்குள்ள பிடிப்பா? இல்லை வேணுமென்டே என்னை சதாய்கிறியா? மூணு வாங்கு தள்ளி நிற்கிற அவனை பார்.முப்பாதாவது தடவையா இங்க பார்கிறான்.நீ வந்ததில இருந்து குனிஞ்சிட்டு இருக்கா.நான் சுமாரா ஆச்சும் இல்லையா?"

என்ற போது நிமிர்ந்து பார்க்க வேண்டியிருந்தது.இவள் பெண்ணா?என்று..
ஆகா-பெண்தான்

Practical no-4 கழுத்து பிடிப்பு குறைந்து
practical no-5 நிமிர்ந்து இருக்க வைத்தாள்.

நேற்றிரவு 11.50 க்கு ஒரு அலார்ம்.11.55 க்கு ஒரு அலார்ம் என்டு இரண்டு அலார்ம் செற் பண்ணி போனுக்கு மேலதான் படுத்து நித்திரை கொண்டேன் .12க்கு  எழும்போணும் என்டு.
இருந்தாலும் எழும்பி பார்க்கேக்க 1.30. அலார்ம்   அடித்ததா என்று யோசிக்காமல் கோல் பண்ண அவசரத்தில்

கோல் போய் முதல் ரிங்கிலேயே கட்டானதில் தெளிவாய் புரிந்தது இரண்டு விடயங்கள்.முதலாவது இன்னும் முழித்திருக்கிறாள் இரண்டாவது தொலைந்தது என் கதை.

மெசேஜ் ல் ரைப் பண்ண தொடங்கினேன்

Practical no -9 திரிபுர சக்தி

பரிசோதனைக்குழாய்குள்ள சல்பூரிக் அமிலத்தை எடுக்க,கொஞ்சம் பிங்க கலர் அடிக்கிறது. முதல் யாரோ எதையோ எடுத்து,கழுவாமல் காய வைத்திருக்கிறான்.வேறு ப.குழாய் இருக்கிறதா என்று பார்க்க சூடு


காட்டிக்கொண்டிருந்த பன்சன் சுவாலை பக் பக் என்றது.காற்று நுழையும் வழியை பெரிதாக்க நீல நிறம் கூடியது.

குனிந்து சுவாலையினூடு பார்க்க நெருப்பாய் தெரிந்த முகம்.கோபக்கனல் வீசியது.திரிபுரம் எரித்தது சிவனா? இவளா ? என்பது ஆயிரத்தி எட்டாவது சந்தேகம்.ஆயிரத்தேழாவது கொஞ்சம் சொல்ல முடியாத சங்கடமான ஒன்று.மிச்சம் 1006ம் நீ முட்டாளா? இல்லை அப்பாவியா? என்று அவளே கேட்டது

பக்கத்தில் போனால் பத்தலாம் இருந்தாலும் போகாமல் இருக்க முடியாது.

"வேற ப.குழாய் இருக்க? . இது கழுவி வைக்கல்ல  போல இருக்கு".
ஸ்டிக்கர் பொட்டு மேல் சின்னதாய் வீபுதி கீறு

"ஏன்?"

"சொரி கொஞ்சம் லேற் ஆயிட்டு இரவு விஷ் பண்ண." இப்ப நேர சொல்லட்டுமா.!
"விஷ் யூ எ ஹப்பி"

"1.30 மணித்தியாலங்கிறது .கொஞ்சம் இல்ல"

"இல்ல."

"இதில நிக்காத அசிட்டை எடுத்து மூஞ்சைல ஊத்திடுவன்.வாற கோபத்தில.ஒரு லவ் பண்ற பொண்ணுக்கு 12 மணிக்கு முழிச்சிருந்து பேத்டே விஸ் சொல்ல தெரியாத நீ எப்டி ?"

கோபத்தில் நெற்றி சுருங்கி கொஞ்ச வீபுதி மூக்கில் கொட்டியது.

"எக்ஸாமுக்கெல்லாம் படிக்க போறாய்?"

"இல்ல அலார்மெல்லாம் வைச்சன் சரியா .ஆனா மு.ப , பி.ப   வ பார்க்காம விட்டுட்டன்.அது மாறி இருந்திருக்கு"

கடைவாய் சிரிப்பை மறைத்து
"நீ முட்டாள இல்ல அப்பாவியா?" -1009வது


இடைல மூணு பிரக்டிக்கல் எழுதாம கள்ளம் அடிக்க பார்த்துக்கான காரணம் இதான்

Practical no - 6 லவ் புறப்போசல் .

ஆகாயா காதல் சொன்ன விதமே ஒரு வில்லங்கமான வழியில்

லாப்பிலிருந்து வெளியில் வரும் போது ஆவர்த்தன அட்டவணையை நீட்டினாள்.
"இதை கவனமா இரவு படிச்சுட்டு வந்து நாளைக்கு பதில் சொல்லு."

Practical no - 7 ஹோம்ஸுனா?கொக்காவா?
முகத்தில் அடிக்காமல் சொல்லி விட்டு போயிருக்கிறாள்.படி என்று.

இரவு.விரித்து வைத்து விட்டு பார்த்தேன்.இதில் எதை படிக்க .கூட்டமா ? ஆவர்த்தனமா?

"இரண்டு நம்பர் மட்டும் மேல பெரிதாய் எழுதி கேள்வி குறி போட்டு ஏன்."என்ன எழுதி இருக்கிறாள்?"

கொஞ்ச காலம் நம்பர் 222B பேக்கரி வீதில உள்ள வீட்டில தான் நாங்கள் இருந்தனாங்கள் என்டதால எனக்கு கொஞ்சம் மூளை வேலை செய்யும் உப்புடி விசயங்கள்ள

எழுதினதை பார்த்தன்.

   "53   71 "

  " 92- ???"

நம்பர் குறிப்பது அணு எண்ணா இருக்கலாம்.அதால நம்பருகளை எழுதி மூலகங்ளை எதிர எழுத

"53 என்ன? அயடின்.71-லற்றேற்றியம்.92- யுரேனியம்."

ம்ம் குறியீடை போட்டால்

53-I
71-Lu
 
92- u ????

அதாவது    " I l u "
                      "U????"
மண்டைக்குள் ஏதோ கிர் கிர் என்றது.

Practical no - 8 ரிப்ளை.

அதிலயே எழுதிக்கொண்டு போய் கொடுத்தேன்.மறுநாள்.

"53  71      2 !!"
சிரித்தாள்.

Practical no 13-20 பிரேக் அப்.
என்ன காரணம் என்று தெரியவில்லை.கதைப்பதை நிறுத்தி விட்டாள்.இவ்வளவு தான் இவளின் இழவுக் காதலா? என்று விட்டு  இலட்சிய வெறி அது இது என்றில்லாமல் சாதரண படிப்பு ஓடியது.

இருபத்தோரவது பிரக்டிக்கலில்
"எதுக்கு அவளோட அவ்ளவு நேரம் நேற்று கதைச்சிட்டு நின்டாய்?
நான் உன்னோட கதைக்காட்டி நீ யாரோட வேணும்னாலும் கதைப்பியா?"

"ஆகா! என்ன வகையான கோபம் இது"

அதன் பின்
மீண்டும் 20 - 29வது பிரக்டிக்கல் வரை அவள் கதைக்க வந்த சில சந்தர்ப்பங்களையும் நான் தவிர்த்தேன்.

Last practical - கிளைமாக்ஸ்

பைனல் எக்ஸாமுக்கு முதல் கிழமை கடைசி வகுப்பில் போகும் போது மறித்தாள்.
ஏதோ ஒரு துளி கோபம் என் மூளையின் ஒரு மூலையில் ஊற

"நீ எப்பாவது நான் ஏன் உன்னை லவ் பண்ணிணன் னு கேட்டிருக்கியா?"

"மண்டைய ஆட்டாமல் பதில் சொல்லு"

"இல்லை"

"இப்பவாச்சும் கேள் ?"

"ஏன்"

"உன்னை முதல் நாள் முதல் தடவை பார்த்து வேணுமென்றால் சாதரணமாய் இருக்கலாம்.ஆனால் இரண்டாந் தடவை ஏன் திரும்பி பார்த்தேன் என்ட அந்த விடை தெரியாத கேள்வி தான் காரணம்.விடை-நீ என்று மூன்றாம் தடவை பார்த்த போது புரிந்தது."

"இந்தக்காதல் சாமான்ய பிரச்சினைகளால் தோற்க கூடாது.சாகும் வரை தொடர வேண்டும்."

"இரவு என்ன அப்துல் ரகுமான் வாச்சியா?"மனதுக்குள் கேட்டுக்கொண்டேன்.

"நான் உன்னோட கதைச்சா நீ படிக்க மாட்டாய் என்டு தெரியும்.அதோட கொஞ்ச செல்பிஷ்ம்தான்.நானும் படிக்கேலாதே.அதான்".

"ஆனா எக்சாம் முடிஞ்சாப்புறமும் இப்டியே இருந்திடலாம்னு நினைக்காதே."

பார்த்து கொண்டிருந்தேன்.
பார்த்து கொண்டிருந்தாள்.

"நான் கதைக்காமல் விட்ட காரணத்தை அவள் சொல்கிறாள். என்ன இது"

"அப்போ ,நீ இன்னும் என்ன லவ் பண்றியா?"

"நீ முட்டாளா இல்லை அப்பாவியா?"

"ஆகா! இதுதான் உனக்கும் எனக்குமான
கெமிஸ்ரியா.......?"



           #####









அற்பபிறவி
பி.கு-இது 100/100 கலப்படமற்ற கற்பனை (ப்பா....)


Thursday, March 5, 2015

வெடியன்

இது வெடியனை அறிமுகப்படுத்த வேண்டிய நேரமென எனக்கு படுகிறது.ஏனெனில் அடுத்தடுத்த சில பதிவுகளில் வெடியன் வரும் போது யார் இந்த வெடியன் என்று நீங்கள் மண்டை சொறியக் கூடாது.பாருங்கள்.



ஆப்பிள் விழும் போது அதை பார்த்துட்டு இருந்தது பியூட்டன்.அவருதான் அண்ணண் நியூட்டன் கிட்ட போய் ஆப்பிள் ஏன் இப்படி கீழ விழுந்தது என்டு கேட்க அதுக்கு பிறகு தான் நியூட்டன் அதை ஆராய்ஞ்சு புவியீர்ப்பு விசையை கண்டுபிடிச்சாராம்.அப்புறம் ஆப்பிள் விழுந்தப்போ தான்தான் அந்த இடத்தில இருந்த என்டு கதையை வேற கட்டி விட்டாரம்.

நம்பமுடிகிறதா?இந்தக்கதையை....ஆனால் வெடியன் இந்தக்கதையை உங்களுக்கு சொல்லியிருந்தால் நிச்சயம் நம்பியிருப்பீர்கள்.அதற்கு காரணம் இரண்டு.முதலாவது விழுந்த ஆப்பிளை போய் கேட்க முடியாது நீ விழுந்தப்போ யார் இருந்தது என்று?
அவன் கதைகளுக்கு எதிராக பெரும்பாலும் ஆதாரம் இருக்காது.
இரண்டாவது வெடியன் கதையை சொல்லுகின்ற தொனி.கைகள் இரண்டையும் ஆட்டி கண்புருவங்களை சுருக்கி,பார்க்கும் போது நிஐமா,பொய்யா என யோசிக்க தோன்றாது.அவனை மட்டுமே பார்க்க சொல்லும்.ஏதோ ஒரு வர்ணிக்க முடியாத அப்பாவித்தனம் முகத்தில் ஒட்டியிருக்கும்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் அறிமுகமான
வெடியனிடம் எப்போதுமே ஒரு பத்தாம் பசலித்தனமான அறிவு இருக்கும்.பேப்பரில் தலைப்பு செய்தி மட்டும் வாசிப்பான்.படம் என்றால் கிளைமாக்ஸ் மட்டும் .கிரிக்கெட் என்றால் 45-50 ஓவர்.டெஸ்ட் மட்ச் பார்க்கவே மாட்டான்.டொஸ் போடும்போது மட்டும் ஹெட் ஓ ரெயில் சொல்லுவான்."பொன்னியின் செல்வனில்" ஆடித்திருநாள் மட்டும் வாசித்திருப்பான்.

அவன் கோயில் மதிலில் இருந்து  கதை சொல்லும் போது அவனை சுற்றி ஒரு கூட்டம் நின்று வாய்பொத்தி கேட்டுக் கொண்டிருக்கும்.நானும்தான்.அவன் போனாற் பிற்பாடு அந்தகதையை அலசி எல்லாரும் கோரசாய் சொல்லுவது ஒன்றுதான்.
"உவன் வெடியனடா"

ஆனால் சில நாட்களாய் எனக்கு வெடியனின் சிற்சில கதைகளில் நம்பிக்கை வந்திருந்தது.உண்மையாய் இருக்குமோ என்று.

வெடியன் சில கதைகளை எதிர்வு கூறுவான்.பார் எப்படியும் வெகுசீக்கிரத்தில அமெரிக்காகாரன் ஈராக் மேல கட்டாயம் அணுகுண்டு போடுவான்.

எங்களுக்கு குண்டுமணி போடும் குண்டுதான் தெரியும்.அணு குண்டெல்லாம் எங்கே தெரியப்போகிறது அந்த நேரத்தில்.ஆவென்று கேட்பதோடு சரி. எதிர்த்து ஏன் அமெரிக்ககாரனுக்கு தங்கட நாட்டில இடமில்லையா என்டு கேட்க திரணியில்லை யாருக்கும்.

காரணம் அவன் எங்கள் வட்டத்துக்குள் தனக்கென்று ஒரு கெத்தை உருவாக்கியிருந்தது.
நோக்கியா 1110 ஐ அறிமுகப்படுத்திய போது அதை அவன் வீட்டில் வாங்கியிருக்க ஒரு நாள் எங்களுக்கு அதை காட்ட கொண்டு வந்திருந்தான்.அன்றுதான் என் கையில் முதல் முதலாய் கைபேசி பட்ட நாள்.அமர்த்தி பார்ப்பதற்குள் கிச்சா பறித்து விட்டான்.விச்சூ மட்டும் அதில் மங்கி கேம் விளையாடிக்காட்டினான்.

இதை வைத்து கடவுளோடும் கதைக்கலாம் என்றான்.கேட்டுக்கொண்டிருந்தார்கள் எல்லோரும்.

வெடியனின் சில கதைகள் மட்டும் வெடி என்று உடனடியாகவே தெரியும்.அதுவும் பெரும்பாலும் எங்கள் ரீமை சேர்ந்தவனாக பற்றிய கதை என்றால் அவன் இல்லாத போது சொல்லுவான்.
நேற்று நானும் குண்டுமணியும் ஒரே இலைலதான் அன்னதானச்சோறு சாப்பிட்டனாங்கள்.என்பான் பச்சை பொய் - என்பது வெளிப்படை உண்மை.

குண்டுமணி இலையை சாப்பிடுவானே ஒழிய இலையில் சாப்பிடுவதில்லை.அவன் சாப்பிடும்போது அவன் அப்பா கூட பக்கத்திலிருந்து சாப்பிட மாட்டார் என்று அதை நிறுவ முடியும்.ஆனால் அவன் போனபின் சொல்வதோடு சரி
"உவன் வெடியனடா"

இப்படி இருந்த ஒரு நாளில்.
கோயில் தெருவுக்கு நாலு தெரு தள்ளி இருபது வயது பெண்ணுக்கு பேய் பிடித்து விட்டது என்ற விடயம்  கோயில் மதிலடியில் அலசப்பட அந்தக்கணத்தில் வெடியன்:
"எங்க அப்பா ஒரு மீடியமடா"என்ற போது

கிச்சா பெருமையாய்
"எங்க அப்பா லார்ஜ்டா என்றான்.

அதில்லைடா எருமை! எங்கப்பா பேயோட எல்லாம் கதைக்க தெரியும்.மேசைல தண்ணி யெல்லாம் வைச்சு கதைப்பாரு.அதைத்தான் மீடியங்கிறது.

"தண்ணியோடயா?"

"குழப்பாதே.அம்மாக்கும் இதெல்லாம் தெரியும் ஆனா அப்பாக்கு கெல்ப் பண்றதோட சரி.கதைக்க எல்லாம் மாட்டா"

"நாங்கல்லாம் ஒரு நாள் வந்து பார்க்லாமாடா."
"இப்ப முடியாது.பேந்து ஒரு நாள் கூட்டிட்டு போறன்"

வெடியனின் கணக்கிடமுடியாத வெடிகளில் இந்த "பேய் வெடியும்" போய் சேர்ந்தது.
ஆனால் அது உண்மையில் தொடரும் என்று நினைக்கவில்லை.

எல்லாம் இந்த தம்பா,ராகீ,கிச்சாவால் வந்த வினை.என்னையும் இழுத்துக்கொண்டு இரண்டு கிலோமீட்டர் தாண்டிய பின் சொன்னார்கள்.

"வெடியன் வீட்டை போகின்றோம்."
வெடவெடத்தது ஒரு(க்)கால்.

"எதுக்குடா?"

"வெடியன் சொன்னது நிசமா,பொய்யான்னு பார்க்கிறதுக்கு"

"எது?"
"எல்லாம்தான்."

"அவன் வீட்ட காரு நிக்குதா?கொம்பியூட்டர் இருக்குதா? அவங்கப்பா வோட துவக்கு!அது.இதுன்னு ஆ அப்புறம் அந்த பேயோட கதைக்கிறது.எல்லாம்தான்."

"இண்டையோட வெடியனின் வெடிக்கெல்லாம் ஒரு முடிவு"கறுவ.

"நிசமாலுமே பேயோட கதைச்சா.அவன் வீட்டு நம்பர் 13 ஆ இருக்குமோ.பார்த்த எல்லா பேய் பட சீனும் கண் முன் நின்றது.இறங்கி ஓட முடியாது முன் சைக்கிள் பாரிலிருந்து.

அவன் இருந்த தெருவுக்கு வந்து அவன் வீட்டைக்கண்டு பிடித்து.சாதரண நடுத்தர வீடு முன்னால் காரில்லை.எங்காவது கொண்டும் போயிருக்கலாம்.

வெடியனின் நிஜப்பேர் சொல்லிக்கூப்பிட 

"ஓம் "வீட்டுக்குளிருந்து கேட்டது.

நாற்பது வயதிருக்கும்.வீட்டு வேலைக்காரியா?இருக்கலாம்.

"....."இல்லையா?

இப்போதான் எங்கோ போகிறான்.நீஙகல்லாம் அவன் ப்ரெண்ஸா?

"ஆமா."

"உள்ளுக்குள்ள வந்திருங்க .வந்துடுவான்."

"படுபாவிகள் சட்டென்று வீட்டுக்குள் நுழைந்துவிட்டார்கள் வேவு பார்க்க.துவக்கோ இல்லை பேயோ.கூப்பிட்டவள் சாரி கூட கொஞ்சம் வெள்ளை.காலிருக்கிறது.பரவாயில்லை.மனுசிதான்.கடைசியாய் நானும் நுழைந்து... இருந்து... அலச சுற்றுப்புறத்தை.சாதரண வீடு.

"என்ன அது"

எனக்கு உறுத்தியது.எல்லாருக்கும் உறுத்த.

நீங்க "........யோட" அம்மாவா?

"இல்லை.இல்லை நான் அவனோட அத்தை.அவன் அம்மாவும்,அப்பாவும் அவன் ஐஞ்சு வயசாயிருக்கப்பவே வன்னி பிரச்சினைல செத்துட்டாங்க.அப்பல இருந்து நான்தான் வளர்க்கிறன்."

"அந்த போட்டோல இருக்கிறதுதான் அவனோட அம்மா.அப்பா"

திரும்பி வரும் போது யாருமே சொல்லவில்லை.

"உவன் வெடியனடா" என்று 

ஏன்??


      #####







அற்பபிறவி.